பதிவு செய்த நாள்
30 ஏப்2014
23:54
சென்னை:இந்த ஆண்டு அட்சய திரிதியையின் போது, தங்க ஆபரணங்கள் விற்பனை, சூடு பிடிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.நடப்பாண்டில் அட்சய திரிதியை வெள்ளிக்கிழமை (நாளை) கொண்டாடப்படுகிறது.பொதுவாக, அட்சய திரிதியை அன்று, தங்கம் உள்ளிட்ட மதிப்புமிகு ஆபரணங் கள் வாங்குவது, தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழகத்தில் தான் வழக்கமாக இருந்தது.ஆனால், தற்போது, நாடு தழுவிய அளவில், அட்சய திரிதியையின் போது, தங்கம் வாங்கும் போக்கு அதிகரித்து உள்ளது.
கிராமங்கள்:இந்நிலையில், நடப்பாண்டில், பருவநிலை மாற்றத்தால், மழை பொழிவு குறையும் என, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.இதனால், இவ்வாண்டு கிராமப்புறங்களில் தங்கம் வாங்குவது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, தங்க ஆபரண நிறுவனங்கள், நகரங்களை குறிவைத்து வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, சென்னையைச் சேர்ந்த, முன்னணி தங்க ஆபரண நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, விவசாயி ஒருவர்கூறியதாவது:பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் அட்சய திரிதியை தினத்தன்று, தங்க நகைகள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால், இவ்வாண்டு பருவ மழை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இழப்பு:இந்நிலையில், கையில் உள்ள சேமிப்பை தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பமில்லை. மேலும், கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது.இந் நிலையில், தங்கத்தில் முதலீடு செய்து, இதன் விலை மேலும் சரிவடையும் நிலையில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.பருவமழை குறைவால், சாகுபடி பாதிக்கப்படும் நிலையில், அது, மேலும் இழப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த ஆண்டு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பவில்லை.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
நாட்டின் ஒட்டுமொத்த தங்கத்திற்கான தேவையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது. பருவமழை குறையும் என்ற நிலைப்பாட்டால், இவ்வாண்டு, அட்சய திரிதியையின் போது, கிராமப்புறங்களில் தங்கம் வாங்குவது குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தல்:லோக்சபா தேர்தலும், தங்க நகை விற்பனையில் அதிக பாதிப்பைஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையால், தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது.மேலும், ரிசர்வ் வங்கி, தங்க காசுகள் இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளது.இது போன்ற காரணங்களால், தங்க ஆபரணங்கள் உற்பத்தியாளர்களுக்கு, தங்கத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவும், தங்க விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த அளவில் பார்க்கும் போது, நாட்டின் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலை சரிவடைந்து வருவதால், பல முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யத் தலைப்பட்டுள்ளனர்.தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளால், கடந்த, 2013ம் ஆண்டில், தங்கம் பயன்பாடு, 974.80 டன்னாகசரிவடைந்தது.கிராமங்களுடன் ஒப்பிடும் போது, நகர்ப்புறங்களில், செலவிடும் வருவாய் ஓரளவிற்கு நன்கு உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஒரு சில மாதங்களில், நகர்ப்புறங்களில் தங்க ஆபரணங்கள்விற்பனை கடந்தாண்டை விட, 6 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
புதிய உத்தி:இதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி, தங்க ஆபரண நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் விற்பனையை அதிகரிக்கும் வகையில், பல்வேறு புதிய உத்திகளுடன் நடவடிக்கை எடுத்து உள்ளன.தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதனால், இவ்வாண்டு அட்சய திரிதியையின் போது, மேற்கண்ட தென் மாநிலங்களில் தங்க ஆபரண விற்பனை சூடுபிடிக்கும் என, சென்னையைச் சேர்ந்த தங்கம், வெள்ளி ஆபரண விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|