பதிவு செய்த நாள்
03 மே2014
17:42
சென்னை: கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், முதன் முறையாக, 300 கோடி ரூபாய் விற்பனை இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு ஆண்டு, விற்பனை இலக்காக, 500 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கோ ஆப்டெக்ஸ் என்ற பெயரில், மாநில அளவில், கூட்டுறவு நிறுவனமாக, 1935ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இதன் விற்பனை நிலையங்களில், பட்டுச் சேலை, பருத்தி சேலை, வேஷ்டி, படுக்கை விரிப்பு, ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கோ ஆப்டெக்ஸ் மூலம், 2011 12ல், 210 கோடி ரூபாய்க்கு, துணிகள் விற்பனையாகின. எனினும், 11.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இச்சூழ்நிலையில், கோ ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக சகாயம் பொறுப்பேற்றார். அவர் விற்பனையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன் பயனாக, 2012 - 13ல், 245 கோடி ரூபாய்க்கு, துணிகள் விற்பனையாகின. ஒட்டு மொத்த லாபமாக, 2 கோடி ரூபாய் கிடைத்தது. இதற்கு முன், கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், 1999 - 2000ல், தான் லாபம் ஈட்டியது. அதன் பின், 12 ஆண்டுகளுக்கு பிறகு, லாபம் கிடைத்தது.
அடுத்து, 2013 - 14ல், விற்பனை இலக்காக, 300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை எட்ட, "வேட்டி தினம், தாவணி தினம்' அறிவிக்கப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. வேட்டி மற்றும் தாவணி விற்பனை அதிகரித்தது. புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், இலக்கை தாண்டி, 302 கோடி ரூபாய்க்கு, துணிகள் விற்பனையாகி உள்ளன. இதில், 15 கோடி ரூபாய் வரை, லாபம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, சகாயம் கூறியதாவது: அடுத்த ஆண்டு இலக்காக, 500 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளோம். மேலும் நடப்பாண்டு, 20 விற்பனை நிலையங்களை, நவீனப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சென்னை, அண்ணா சாலையில், புதிய விற்பனை நிலையம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், கட்ட உள்ளோம். கோடை காலத்திற்கு, நவீன பருத்தி சேலைகளை, அறிமுகப்படுத்தி உள்ளோம். பட்டுச் சேலைகளில், "சூப்பர் 1000' என்ற பெயரில், புதிய ரகத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
சென்னை முதலிடம் : கோ ஆப்டெக்ஸ் விற்பனையில், சென்னைக்கு முதலிடம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு, சென்னையில், 51.46 கோடி ரூபாய்; கோவையில் 31.27; வேலூரில், 30.76; திருவண்ணாமலையில், 30.10; சேலத்தில், 29.10; தஞ்சாவூரில், 26.36; மதுரையில், 25.94 கோடி ரூபாய்க்கு, துணிகள் விற்பனையாகி உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|