பதிவு செய்த நாள்
07 மே2014
00:43
புதுடில்லி:நடப்பாண்டில், உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை உயர வாய்ப்புள்ளது என, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில், தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லாததால், நம்நாடு அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ரிசர்வ் வங்கி:குறிப்பாக, உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதிக்காக, தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.அதேசமயம், கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இறக்குமதி செய்யப்படுவதால், அது நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க செய்கிறது.இதன் காரணமாக, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன.இந்நிலையில், நடப்பாண்டில், தங்கத்திற்கான தேவை, 1,000 டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது, கடந்த 2013ம் ஆண்டின் தேவையான, 975 டன்னை விட அதிகம் என, உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் (இந்தியா) பீ.ஆர். சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.அதேசமயம், நடப்பாண்டில் பருவ நிலை மாறுபாட்டால், மழை பொழிவு வெகுவாக குறையும் என, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதனால், வேளாண் விளைபொருள் உற்பத்தி குறைந்து, பணவீக்கம் அதிகரிக்கும் என்ற கருத்தும் உள்ளது.
வறட்சி:இவை, தங்கத்திற்கான தேவை வளர்ச்சியை பாதிப்புக்குள்ளாக்கும் என, கருதப்படுகிறது. ஏனெனில், கடந்த 2009ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியால், அவ்வாண்டில் தங்கத்திற்கான தேவை, முந்தைய 2008ம் ஆண்டை விட (712 டன்), 32.6 சதவீதம் சரிவடைந்து, 480 டன்னாக வீழ்ச்சி கண்டது.சுங்கவரி:அதற்கு அடுத்த, 2010ம் ஆண்டில், நாட்டில் தங்கத்திற்கான தேவை, மிகவும் அதிகபட்சமாக, 1,006 டன்னாக அதிகரித்தது. அவ்வாண்டை தொடர்ந்து, 2011ம் ஆண்டில், தங்கத்திற்கான தேவை, 933 டன்னாகவும், 2012ம் ஆண்டில், 864 டன்னாகவும் இருந்தது.
கடந்த 2013ம் ஆண்டில் மத்திய அரசு, தங்கம் இறக்குமதி மீதான சுங்கவரியை, 3 முறை உயர்த்தியது. இதையடுத்து, தங்கம் மீதான இறக்குமதி வரி, 4 சதவீதத்திலிருந்து, 10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.மேலும், ரிசர்வ் வங்கி, தங்கத்தை இறக்குமதி செய்து கொள்ளும் நிறுவனங்கள், 20 சதவீத அளவிற்கு ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அமல்படுத்தியது.இதையடுத்து, தங்கம் இறக்குமதியில், மாதத்திற்கு, 10 டன் குறைந்து வந்தது. இது, சாதகமான வர்த்தக சூழல் காரணமாக, கடந்த சில மாதங்களாக, தங்கம் இறக்குமதி, மாதத்திற்கு, 40–50 டன் என்ற அளவில் உயர்ந்து வருகிறது.
கடந்த 2012–13ம் நிதியாண்டில், 8,820 கோடி டாலராக இருந்த, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, சென்ற நிதியாண்டில், 3,200 கோடி டாலராக குறைந்துள்ளது.நம்பிக்கை:இதன் காரணமாக, லோக்சபா தேர்தலுக்கு பிறகு, மத்தியில் ஆட்சி அமைக்கும் புதிய அரசு, தங்கம் மீதான கட்டுப்பாடுகளை குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இதனால், தங்கத்திற்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|