பதிவு செய்த நாள்
23 மே2014
02:22
தங்கம் விலை, நேற்று திடீரென்று கடுமையாக வீழ்ச்சி கண்டது. சென்னையில், சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, 21,176ஆக சரிவடைந்தது. இதனால் நகை வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது.10 கிராம் சுத்த தங்கம் விலை, 800 ரூபாய் வரை குறைந்து, 28,310ஆக வீழ்ச்சி கண்டது.
இது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, அதாவது, 9 மாதங்களுக்கு பிறகு காணப்படும் நிலையாகும்.நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், ரிசர்வ் வங்கி, தங்கம் இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
தடை நீக்கம்:இதன்படி, ஒரு சில வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட முகமை நிறுவனங்களுக்கு மட்டுமே, தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இறக்குமதி தங்கத்தில், 20 சதவீதம், மதிப்பு கூட்டப்பட்ட ஆபரணங்களாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
நகை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, தங்கம் மீது கடன் வழங்கவும், வங்கிகளுக்கு, தடை விதிக்கப்பட்டது. இத்துடன், மத்திய அரசும், தன் பங்கிற்கு, தங்கம் மீதான இறக்குமதி வரியை, 4 சதவீதத்தில் இருந்து, படிப்படியாக 10 சதவீதமாக உயர்த்தியது.மேற்கண்ட காரணங்களால், தங்கம் இறக்குமதி குறைந்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, சென்ற 2013–14ம் நிதியாண்டில், 8,820 கோடி டாலரில் இருந்து, 3,200 கோடி டாலராக குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து வெற்றி கண்ட போதிலும், தங்க நகை வியாபாரிகளின் கடும் அதிருப்தியை சந்திக்க நேர்ந்தது.
தயாரிப்பு செலவு:தேவையான தங்கம் கிடைக்காமல், சிறிய நகை நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்தன. பெரிய நிறுவனங்கள், உயர் மதிப்பு விலையில், தங்கம் வாங்கிய தால், நகை தயாரிப்பு செலவு அதிகரித்தது. இதனால், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுக ளை நீக்க வேண்டும் என, தங்க நகை வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர்.அதை ஏற்று, கடந்த மார்ச் மாதம், தங்கம் இறக்குமதி செய்ய மேலும் ஐந்து வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்னும் சில தினங்களில், மோடி தலைமையில், மத்தியில் புதிய அரசு அமைய உள்ளதை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி, ஸ்டார் டிரேடிங் ஹவுசஸ், பிரிமியர் டிரேடிங் ஹவுசஸ் என்ற இரு நிறுவனங்கள் மற்றும் தனியார் நகை ஏற்றுமதியாளர்களுக்கு, தங்கம் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்கியுள்ளது.இந்த உத்தரவின் பின்னணியில், நிதியமைச்சக அதிகாரிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உயர் மதிப்பு:இந்த தடை நீக்கம் காரணமாக, தங்கம் இறக்குமதி அதிகரிக்கும் என்பதோடு தங்கம் மீதான உயர் மதிப்பு விலையும் குறையும். ஏற் கெனவே, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை எதிர்பார்த்து, கடந்த இரு வாரங்களில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உயர் மதிப்பு, 125 டாலரில் இருந்து, 80 டாலராக குறைந்துள்ளது. இது, வரும் நாட்களில், 20 டாலராக குறைய வாய்ப்புஉள்ளது.
இதனால், நேரடியாக தங்கம் இறக்குமதி செய்யும்வியாபாரிகளுக்கு, கணிசமான பணம் மிச்சமாகும். இது, நகை வியாபாரத்தில் போட்டியை அதிகரித்து, அதன் விலை குறைய வழிவகுத்துள்ளது. வரும் நாட்களில், 10 கிராம் சுத்த தங்கம், 26 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|