பதிவு செய்த நாள்
28 மே2014
14:44
புதுடில்லி: ''பல்பொருள் சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்தினால், சிறு வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்,'' என, மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசில், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக, தமிழகத்தின் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமன் பதவியேற்றுள்ளார். நேற்று காலை, வர்த்தக அமைச்சக அலுவலகத்துக்கு வந்த நிர்மலாவுக்கு, அமைச்சக அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதன்பின், அமைச்சர் பொறுப்புகளை அவர் ஏற்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பல்பொருள் சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது இல்லை என்பது, பா.ஜ.,வின் திட்டவட்டமான நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, இதை வலியுறுத்தியுள்ளோம். தற்போது ஆளும் கட்சியாக மாறியபின், இந்த நிலையில் மாற்றம் இருக்குமா என, கேட்கப்படுகிறது. கண்டிப்பாக மாற்றம் இருக்காது. இந்த திட்டத்தை அமல்படுத்தினால், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், நாட்டின் முக்கிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், ஏராளமான பல்பொருள் அங்காடியை திறப்பதற்கு அனுமதி அளித்தால், உள்நாட்டு சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இந்த விவகாரத்தில், பா.ஜ.,வின் நிலையில் மாற்றம் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பா.ஜ., தேர்தல் அறிக்கையில், பல்பொருள் சில்லரை விற்பனை துறை தவிர, மற்ற துறைகளில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து ஆலோசிப்போம் என, கூறப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், விரிவாக ஆலோசிக்க திட்டமிட்டுள்ளேன். ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு, இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். அனைத்து நாடுகளுடனும், சுமுகமான வர்த்தக உறவை ஏற்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
காங்., அரசு: முந்தைய காங்., தலைமையிலான அரசு, பல்பொருள் சில்லரை விற்பனையில், அன்னிய முதலீட்டை அனுமதித்தது. ஆனாலும், பிரிட்டனை சேர்ந்த டெஸ்கோ என்ற நிறுவனத்துக்கு மட்டுமே, இதற்கான அனுமதியை முந்தைய அரசு அளித்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|