பதிவு செய்த நாள்
29 மே2014
00:23
புதுடில்லி ;பரஸ்பர நிதி திட்டங்களில், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் ‘தில்லுமுல்லு செய்துள்ளதை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி கண்டுபிடித்துள்ளது. விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள், அவற்றின் பரஸ்பர நிதி திட்டங்களில் உள்ள குளறுபடிகளை, உடனடியாக சரி செய்யாவிட்டால், கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என, ‘செபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆய்வு:இதுகுறித்து, இந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:பரஸ்பர நிதி நிறுவனங்கள்,அவற்றின் பரஸ்பர நிதி திட்டங்களின் செயலாக்கம் தொடர்பான, காலாண்டு அறிக்கையை, ‘செபிக்கு தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறு தாக்கல் செய்த,சில நிறுவனங்களின் பரஸ்பர நிதி திட்டங்ளை ஆய்வு செய்த போது, அதில் உள்ள பல்வேறு குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்தன.விதிமுறைப்படி, ஒவ்வொரு பரஸ்பர நிதி திட்டமும், குறைந்தபட்சம் 20 முதலீட்டாளர்களை கொண்டிருக்க வேண்டும்.அத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில், ஒருவரின் முதலீடு, 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள நிறுவனங்கள், அவற்றின் பல்வேறு திட்டங்களில், மேற்கண்ட விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை.
சில முதலீட்டாளர்கள், ஒரு திட்டத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து விட்டு, காலாண்டிற்கான விதிமுறைகளை பின்பற்றும் நோக்கில், அந்த முதலீடுகளை, பின் திரும்ப பெற்றுள்ளனர்.
விதிமீறல் :பல திட்டங்களில், முழு காலாண்டிலும், முதலீட்டு விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளன.அது மட்டுமின்றி, பல திட்டங்களில், குறைந்தபட்ச முதலீட்டாளர் எண்ணிக்கைக்காக, ஒரு முதலீட்டாளரின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், அவரது முதலீடும், அத்திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில், 25 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதை, ‘செபி கண்டுபிடித்து உள்ளது.
இந்த முறைகேடுகள் குறித்து,இந்திய பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பிற்கும் தெரிவிக்கப் பட்டு, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும், சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை, மாதந்தோறும் அளிக்க வேண்டும் என,‘செபி அண்மையில் உத்தரவிட்டு உள்ளது.இந்த விவரங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் வலைதளத்தில், ஒவ்வொரு மாத துவக்கத்தில், 7 வர்த்தக தினங்களுக்கு உள்ளாக வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
வெளிப்படை:அதுமட்டுமின்றி, காலாண்டு தோறும், பல்வேறு நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு அடிப்படையி லான வாக்குரிமை விவரங்களையும், வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என, ‘செபி வலியுறுத்தி உள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற, பரஸ்பர நிதி நிறுவனங்களின் ஒளிவு மறைவற்ற தகவல் பகிர்வு உதவும் என்ற நோக்கத்தில், விதிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. ஆனால், அவற்றையும் சில நிறுவனங்கள் மீறியுள்ளன என்பது தான், வேதனை. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|