பதிவு செய்த நாள்
30 மே2014
01:15
நேற்று, குஜராத் வதோதரா எம்.பி., ‘சீட்’டை, மோடி ராஜினாமா செய்து விட்டார். இன்னொரு தொகுதியான, உ.பி.,யில் உள்ள வாரணாசி எம்.பி.,யாக அவர் இனி செயல்படுவார்.
குஜராத்தில் இருந்து, உ.பி., எம்.பியாக பயணிப்பதின் மூலம், இந்திய பிரதமர்கள் பலர், உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற வரிசையில், இனி மோடி செயல்படுவார்.ராஜ்யசபாவில், அரசு கொண்டு வரும் மசோதாக்கள் வெற்றி பெற, 160 ஆதரவு எம்.பி.,க்கள் பலம் தேவை. அரசு மேற்கொள்ளும் சபை ஒத்துழைப்பு நடவடிக்கைகள், கொண்டு வரப்படும் மசோதாவை, மாநில அரசுகள் அதிகம் வரவேற்கும் சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில், அது வெற்றி பெறலாம். இன்றைய நிலையில், அரசுக்கு இச்சபையில், 62 எம்.பி.,க்கள் மட்டுமே உள்ளனர்.
முதல் நடவடிக்கை :அதற்கு முதற்படியாக, கூட்டாட்சி தத்துவம் அடிப்படையில், மாநிலங்களின் கருத்துக்களை கேட்டு, அவைகளின் ஒட்டுமொத்த நலன்கள் அடிப்படையில், முக்கிய கொள்கைகளை நிறைவேற்ற, மோடி அரசு பாடுபடும் என, அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாநில கட்சிகள் ஆதரவைப் பெற, இது முதல் நடவடிக்கை எனலாம். முதல் நுாறு நாட்களில் பின்பற்றப்படும், அரசின் முக்கிய திட்டங்களே, இதன் வெற்றி அணுகு முறைகளை உணர்த்தி விடும்.அதற்குமுன், வரும் ஜூலை மாதத்தில், மத்திய அரசின் பட்ஜெட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்வார். அதற்காக, கடந்த இரு தினங்களில், அவர் நிதியமைச்சகம் மற்றும் தொழில் துறையின் முக்கிய பிரமுகர்களை சந்தித்திருக்கிறார்.காங்., தலைமையிலான கூட்டணி அரசில், நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், கடைசி நிமிடம் வரை, தன் பதவிக் காலத்தில் செய்த பணிகள், எந்த அளவுக்கு பொருளாதாரத்திற்கு சாதகமாக இல்லை என்பதை, பட்ஜெட் வெளிச்சம் போட்டுக் காட்டும்.
மதிப்பீடு நிதியமைச்சர் அருண்ஜெட்லி, தன் அமைச்சக அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்திய போது, நிதித் துறை பற்றிய மதிப்பீடுகளை அவர் கேட்டறிந்தார்.அதுகுறித்து, வெளியான தகவல்கள்: 2013 – 2014ம் நிதியாண்டில், வரி வருவாய் அளவு குறைந்தது. நேரடி வரிவிதிப்பில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 870 கோடி கிடைக்கும் என, 2013 – 2014 பட்ஜெட் மதிப்பீடு செய்தது. அதை திருத்தி மதிப்பீடு செய்த போது, அத்தொகை, 11 லட்சத்து 58 ஆயிரத்து 905 கோடியாக, குறைக்கப்பட்டது.
நேரடி வரிவிதிப்பில் வசூல் இலக்கில், 5,000 கோடி ரூபாய் அதிகரித்தது. ஆனால், மறைமுக வரி வசூலில் இலக்கை அடைய முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 17 ஆயிரம் கோடி ரூபாய் குறையலாம்.l தொழில் துறை உற்பத்தி மற்றும் இறக்குமதி குறைந்ததால், வரி இனங்கள் வாயிலான வருவாய் குறைந்தது.lதங்கத்தின் மீதான இறக்கு மதி வரி அதிகரிப் பால், 200 டன் தங்கம், கள்ளக்கடத்தல் மூலம் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக, உலக தங்க கவுன்சில் தகவல் கூறுகிறது.
இந்த அடிப்படை சவால்கள் தவிர, மற்ற பிரச்னைகள் குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், அமைச்சர் ஜெட்லி ஆலோசித்திருக்கிறார். அதில் வளர்ச்சிக்கான வழிமுறைகள் முக்கியமானது.இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது, முந்தைய நிதியமைச்சர் சிதம்பரம், இன்று சுதந்திரமான மனிதர்.
இதற்கான காரணங்களுக்கு, அவர் விடை தர வேண்டிய சூழலும் இல்லை. ஆனால், புதிய நிதியமைச்சர் ஜெட்லி, இவைகளை சமாளித்து, மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, பட்ஜெட் தீட்டியாக வேண்டிய அதிக சுமையில் இருக்கிறார்.
வீண்செலவை விரும்பாதவர்: பிரதமர் மோடியின், அதிக நம்பிக்கையை பெற்ற ஜெட்லி, சிறந்த வழக்கறிஞர் மட்டும் அல்ல; முன், வாஜ்பாய் அமைச்சரவையில், வர்த்தக அமைச்சராக இருந்து அனுபவம் பெற்றவர். அவர் எப்போதும், தன் நண்பர்களிடம், ‘வரவுக்கு மீறிய செலவு ஆபத்தானது; அர்த்தமற்ற செலவை விட, சேமிப்பு மேல்’ என்ற கருத்தைக் கூறுவாராம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, அவர் வெளியிடும் பட்ஜெட், எப்படி அமையப்போகிறது என்ற ஆவல், இப்போது அதிகரித்திருக்கிறது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|