பதிவு செய்த நாள்
02 ஜூன்2014
15:09
நாமக்கல்: மத்திய அரசு, 2013 ஜனவரி முதல், டீசல் விலையை, மாதந்தோறும், 50 காசு உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது. எரிபொருள் விற்பனையில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட அல்லது முற்றிலும் தவிர்க்கப்படும் வரை, விலையை உயர்த்திக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு மாதமும், டீசல் விலை, 50 காசு வரை, எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. அதனால், டீசல் உபயோகத்தை, அதிகம் பயன்படுத்துவோர், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, டீசலுக்கான விலை உயர்வு, லிட்டருக்கு, 50 காசாக உயர்த்தப்பட்டது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியிலும், விலை மாற்றம் இருக்கும். அதன்படி, சென்னையில், லிட்டருக்கு, 71 காசு வரை உயர்ந்தது. அதாவது, லிட்டர், 60.50 ரூபாயில் இருந்து, 61.21 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரசின், முன்னாள் தென்னிந்திய துணைத் தலைவர் அனிதாவேலு கூறியதாவது: லாரி தொழில், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும், 50 காசு வரை, விலை உயர்த்தப்படுகிறது. கடந்த, தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலை உயர்வை, தேவைக்கு ஏற்ப உயர்த்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.அடுத்து ஆட்சிக்கு வந்த, காங்கிரஸ் தலைமையிலான அரசு, முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கையை பின்பற்றியது. தற்போது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சிக்கு வந்துள்ளது.டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். மானியத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான், தொடர்ந்து விலை உயர்வதை கட்டுப்படுத்த முடியும். வாகனங்களை இயக்க தேவையான வரிகளை கட்டிய பிறகும் கூட, டீசல் மீதான, 40 முதல், 50 சதவீதம் அதிகப்பட்ச வரியால், பாதிப்பு ஏற்படுகிறது.
புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பின், உலகளாவிய வர்த்தகத்தில், சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்திய ரூபாயின் மதிப்பு, படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 56 ரூபாயாக இருக்கும் பட்சத்தில், டீசல் மீதான விலை குறைந்து, நிலைமை சீராக வாய்ப்புண்டு.டீசல் மீதான விற்பனை வரியை பொருத்தமட்டில், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதில், தமிழகத்தில், 21.43 சதவீதமாக உள்ளது. கர்நாடக மாநில எல்லையான ஓசூரில் டீசல் பிடிப்பதற்கும், சில கி.மீ., உள்ள, கர்நாடக மாநிலத்தில், டீசல் பிடிப்பதற்கும், லிட்டருக்கு ஒரு ரூபாய் மிச்சமாகிறது. தமிழகத்தில், மற்ற பொருட்களுக்கு, 12.5 சதவீதமாக வரிவிதிப்பு உள்ளது போன்று, டீசல் மீதான கூடுதல் வரியை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|