பதிவு செய்த நாள்
03 ஜூன்2014
00:27
சென்னை ;ஓராண்டிற்கு, ஒரு குடும்பத்திற்கு வழங்கும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் எண்ணிக்கையை, 12லிருந்து, 9ஆக குறைக்கலாம் என, நிதி மற்றும் பெட்ரோலிய அமைச்சகங்கள், இணைந்து தயாரித்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் அளிக்கவுள்ளன.வீடுகளுக்கு வழங்கும் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை, சிலர், கூடுதல் விலைக்கு, ஓட்டல், டீ கடை போன்றவற்றுக்கு விற்பது அதிகரித்துள்ளது. இப்படி, கள்ளத்தனமாக விற்பதன் மூலம், ஒரு சிலிண்டரில், 600 – 800 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய போக்கால், மானியமற்ற, வர்த்தக பயன்பாட்டிற்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விற்பனை அடியோடு குறைந்து விட்டது.ஏழு போதும்:பெட்ரோலியம் மற்றும் நிதி அமைச்சகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமைச்சகங்களின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, சஞ்சய் தான்டே குழு அளித்த அறிக்கையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு, சராசரியாக, 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ஓராண்டிற்கு, மானிய விலையில் 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம், 2012ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், அதுவரை, வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரை, ஓட்டல், டீ கடை போன்றவற்றுக்கு விற்பது குறைந்தது.இதன் காரணமாக, செப்டம்பர் முதல், 2013 ஜனவரி வரையிலான காலத்தில், வீட்டு சிலிண்டர் பயன்பாடு, 2 சதவீதமும், மானியமற்ற வர்த்தக சிலிண்டர் பயன்பாடு, 15 சதவீதமும் அதிகரித்தன.
இந்நிலையில், நாடு தழுவிய எதிர்ப்பு காரணமாக, 2013ம் ஆண்டு ஜனவரியில், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, 9ஆக, மத்திய அரசு உயர்த்தியது.அது முதல், நடப்பு 2014ம் ஆண்டு ஜனவரி வரையிலான ஓராண்டில், வீட்டு சிலிண்டர்களின் பயன்பாடு, 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், வர்த்தக சிலிண்டர்களின் பயன்பாடு, மைனஸ் 4 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது.
பின்னடைவு:இந்நிலையில், பார்லிமென்ட் தேர்தலை கருத்தில்கொண்டு, சென்ற ஜனவரியில், வீட்டிற்கான, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை, 12 ஆக, மத்திய அரசு உயர்த்தியது.இதையடுத்து, ஜன.,–ஏப்., வரையிலான நான்கு மாதங்களில், வீடுகளுக்கான சமையல் எரிவாயு பயன்பாடு, 13 சதவீதம் அதிகரித்துள்ளது.அதே சமயம், மானியமற்ற, வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் பயன்பாடு, மேலும் குறைந்து, மைனஸ் 10 சதவீதம் என்ற அளவில், பின்னடைவை கண்டுள்ளது.இதில் இருந்து, வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், கூடுதல் விலைக்கு, வர்த்தக நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படுவது தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது.
பரிசீலனை:இது தொடர்பான ஆய்வறிக்கையின் அடிப்படையில், வீடுகளுக்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.கடந்த, 2014ம் நிதியாண்டில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்த வகையில், 1.40 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளன.இது, முந்தைய நிதியாண்டை விட, 20 ஆயிரம் கோடி ரூபாய் குறைவு தான் என்றபோதிலும், இதே காலத்தில், சமையல் எரிவாயு மீதான இழப்பு, 39,558 கோடியில் இருந்து, 46,558 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|