பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
00:35
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, சென்ற ஏப்ரல் மாதம், 3.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய 13 மாதங்களில் காணாத வளர்ச்சியாகும்.
தொய்வு:கடந்த 2013ம் ஆண்டு மார்ச்சில், தொழில் துறை உற்பத்தி, 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதையடுத்து, ஏப்ரலில் 1.5 சதவீதமாக குறைந்தது. அதன் பின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, தொடர்ந்து தொய்வை கண்டு வந்தது. நடப்பாண்டு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, முறையே 1.7 சதவீதம் மற்றும் 0.5 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டது.இந்நிலையில், மின்சாரம், தயாரிப்பு, சுரங்கம், பொறியியல் ஆகிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி காரணமாக, சென்ற ஏப்ரலில், தொழில்துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.சென்ற ஏப்ரலில், மின் துறையின் உற்பத்தி, 11.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 4.2 சதவீதமாக இருந்தது
இதே காலத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 1.8 சதவீதத்தில் இருந்து, 2.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொழில் துறை உற்பத்தியை கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னடைவு:மதிப்பீட்டு காலத்தில், சுரங்க துறையின் உற்பத்தி, மைனஸ் 3.4 சதவீதம் என்ற பின்னடைவில் இருந்து, 1.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே காலத்தில், பொறியியல் துறையின் உற்பத்தி, மைனஸ் 0.3 சதவீதம் என்ற பின்னடைவில் இருந்து மீண்டு, 15.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
தொழில் துறை உற்பத்தி வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியிருப்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள, மத்திய அரசுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாக, வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|