பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
01:13
புதுடில்லி:உள்நாட்டில் உரம் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு, விரைவில் புதிய முதலீட்டு கொள்கையை அறிவிக்க உள்ளது. இதன் மூலம், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், மூன்று அல்லது நான்கு உர உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும் என, தெரிகிறது.
மாற்றம்:இந்தியாவில் உரங்களுக்கான தேவை, ஆண்டுக்கு, 3 கோடி டன்னாக உள்ளது. இதில், உள்நாட்டு உற்பத்தி, 2.20 கோடி டன் என்ற அளவிற்கே உள்ளது. இறக்குமதி மூலம், எஞ்சிய தேவை, பூர்த்தி செய்து கொள்ளப்படுகிறது.உள்நாட்டில் உர உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், முந்தைய ஐ.மு., அரசு, உரக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்தது.அவற்றில், உர உற்பத்தியை துவக்கும் நிறுவனங்கள், 300 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் வழங்கி,குறிப்பிட்ட நிலைக்கு உற்பத்தி உயரும் வரை, உத்தரவாத தொகையை, படிப்படியாக குறைத்துக் கொள்ளும் முக்கிய அம்சம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பான அரசாணை, பார்லிமென்ட் தேர்தல்நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், வெளியிடப்படவில்லை.தற்போது, மத்தியில் அமைந்துள்ள பா.ஜ., அரசு, உரத்துறையில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், மேலும் சில அம்சங்களை சேர்த்து, உரக் கொள்கை குறித்த அரசாணையை விரைவில் வெளியிட உள்ளது.இதையடுத்து, உடனடியாக, 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான முன்று அல்லது நான்கு உர தயாரிப்பு திட்டப் பணிகள் துவங்கும் என, தெரிகிறது.அதில், ஒடிசாவில் உள்ள, நலிவடைந்த பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற பொதுத் துறை நிறுவனத்தின் புனரமைப்பு திட்டம் மற்றும் மகாராஷ்டிராவின் தால் பகுதியில் புதிய உர தொழிற்சாலை அமைக்கும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.
மானியம்:மூன்றாவதாக, தனியார் நிறுவனம் ஒன்று, உர உற்பத்தியில் ஈடுபட உள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும், தலா, 5,000 கோடி ரூபாய் முதலீட்டில், 13 லட்சம் டன் உர உற்பத்தி திறனை கொண்டிருக்கும். இத்துடன், மேலும் ஒரு தனியார் நிறுவனமும், உர உற்பத்தியில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.மேற்கண்ட திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், கிட்டத்தட்ட 40 லட்சம் டன் உரம் கிடைக்கும். இதனால், நாட்டின் உரம் இறக்குமதி குறையும்.மத்திய அரசு, விவசாயிகளுக்கு மானிய விலையில், ஒரு டன் உரம், 5,360 ரூபாய் வீதம் வழங்கி வருகிறது.உள்நாட்டு உர நிறுவனங்களின் உற்பத்தி செலவிற்கும், விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாச தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|