பதிவு செய்த நாள்
14 ஜூன்2014
16:52
சென்னை: பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும் என, தர நிர்ணய நிறுவனமான 'கிரிசில்' தெரிவித்துள்ளது.
அடக்க விலை
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் விவரம் வருமாறு: ஐ.ஓ.சி., - பீ.பி.சி.எல்., -எச்.பி.சி.எல்., ஆகிய மூன்று நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக, டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை விற்பனை செய்கின்றன. இதனால் ஏற்படும் இழப்பு, மத்திய அரசின் மானிய உதவி மூலம் ஈடுசெய்யப்படுகிறது. பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து, எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்கின்றன.
மாதந்தோறும்... அதே சமயம், டீசல் விலையில், மாதந்தோறும் லிட்டருக்கு, 50 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது.இதன் காரணமாகவும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மேலும் குறையும் என்ற கணிப்பின் அடிப்படையிலும், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு குறைந்து, லாப வரம்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு 2014-15ம் நிதியாண்டில்,இந்நிறுவனங்களின் வரிக்கு பிந்தைய லாபம், 3,000 கோடியில் இருந்து, 3,600 கோடி ரூபாய் வரை அதிகரிக்கும்.
அடுத்த நிதியாண்டில், மேலும், 700 - 1,000 கோடி ரூபாய் வரை நிகர லாபம் உயரும். நிறுவனங்களின் வட்டிச் செலவினம் குறைவதால், இது சாத்தியமாக வாய்ப்புள்ளது. அது போன்று, ஓ.என்.ஜி.சி., கெயில், ஆயில் இந்தியா ஆகிய மூன்று பொதுத் துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் வரிக்கு பிந்தைய லாபம், நடப்பு நிதியாண்டில், 10,500 கோடி ரூபாயில் இருந்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கும்.
எரிவாயு: இதில், வரும் நிதியாண்டு, மேலும், 7,000 - 7,500 கோடி ரூபாய் உயர வாய்ப்புள்ளது. பெட்ரோலிய பொருட்களால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பில், 40 -50 சதவீதத்தை எண்ணெய்மற்றும் எரிவாயு நிறுவனங்கள் ஏற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லாபம்: இயற்கை எரிவாயு விலை உயர்வு, வரும் ஜூலை 1முதல் அமலுக்கு வரும்பட்சத்தில், ஓ.என்.ஜி.சி., கெயில், ஆயில் இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களின் மொத்த லாபம், 21,500 கோடியில் இருந்து, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.இதையடுத்து, வரிக்கு பிந்தைய லாபம், 7,000 கோடியில் இருந்து, 7,500 கோடி ரூபாய் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என, தெரிகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|