பதிவு செய்த நாள்
21 ஜூன்2014
00:53
மும்பை:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி), அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் காரணமாக, பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வரம்பு:மூலதனச் சந்தையை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய விதிமுறைகளை, ‘செபி வெளியிட்டுள்ளது. அவற்றில், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும், பொதுமக்களின் பங்கு மூலதனம், 25 சதவீதம் இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாத பட்சத்தில், மூன்று ஆண்டுகளுக்குள், குறிப்பிட்ட வரம்பை நிறுவனங்கள் எட்ட வேண்டும் என்பதுவும் ஒன்று.தற்போது, 36 பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசின் பங்கு மூலதனம், 75 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இதனால், இந்நிறுவனங்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில், பங்கு வெளியீடு மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில், பங்கு விற்பனை மூலம், மத்திய அரசுக்கு, 60ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னணியில் உள்ள, 10 பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்கு விற்பனை மூலம், 54 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக மத்திய அரசுக்கு கிடைக்கும். இதில், கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையில் மட்டும், 35 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிறுவனத்தில், தற்போது, மத்திய அரசின் பங்கு மூலதனம், 89.65 சதவீதமாக உள்ளது. அது போல், என்.எம்.டீ.சி., என்.எச்.பி.சி., என்.எல்.சி., செயில், எம்.ஆர்.பி.எல்., இந்துஸ்தான் காப்பர், எஸ்.ஜே.வி.என்., சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, எம்.எம்.டி.சி., ஆகிய ஒன்பது நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 19 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
நிர்ணயம்: கடந்த நிதியாண்டில், மத்திய அரசு, பங்கு விற்பனை மூலம், 54ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், பங்குச் சந்தையின் சாதகமற்ற நிலையால், இந்த இலக்கு, 16,030 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|