பதிவு செய்த நாள்
30 ஜூன்2014
02:13
திருவனந்தபுரம்:சர்வதேச அளவில் மிளகு உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.மிளகு உற்பத்தியில், வியட்னாமும், அதன் பயன்பாட்டில், இந்தியாவும், முதலிடத்தில் உள்ளன.
கடந்த, 2013ம் ஆண்டு, சர்வதேச மிளகு உற்பத்தி, 3,16,832 டன்னாக இருந்தது. 'எல்–நினோ' தாக்கத்தால், நடப்பாண்டு, சர்வ தேச மிளகு உற்பத்தி, கடந்த ஆண்டை விட, 6,000 டன் குறையும் என, சர்வதேச மிளகு கூட்டமைப்பு (ஐ.பி.சி.,) மதிப்பிட்டுள்ளது.
அது போன்று, இந்தியாவில் பருவ மழை தள்ளிப் போயுள்ளதால், நடப்பு 2014–15ம் நிதியாண்டில்,மிளகு உற்பத்தி,11ஆயிரம் டன் குறைந்து, 34 ஆயிரம் டன்னாக சரிவடையும் என, தெரிகிறது. இது, கடந்த நிதியாண்டில், 45 ஆயிரம் டன்னாக இருந்தது.
உள்நாட்டில்,கடந்த ஓராண்டில்,மிளகுவிலை, இரு மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மிளகு அதிகம் விளையும், கேரளா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில்,பருவநிலை மாற்றத்தால், அதன் உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால், கடந்த சில வாரங்களில், சில்லரை விற்பனையில்,ஒரு கிலோ மிளகுவிலை,690 ரூபாயில் இருந்து,790 ரூபாயாக அதிகரித்துள்ளது.ஒரு டன் மிளகு விலை, 13 ஆயிரம் டாலராக (7.80 லட்சம் ரூபாய்) உயர்ந்துள்ளது.
நியூயார்க் வேளாண் முன்பேர சந்தையில், நடப்பு ஜூன் 20ம் தேதி நிலவரப்படி, 1 கிலோ மிளகு விலை, 9.37 டாலராக அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு, இதே நாளில், 6.84 டாலராக இருந்தது. வியட்னாமில், ஒருகிலோ மிளகு விலை, 1.70 லட்சம் வியட்னாம் டாங் ஆக, புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஒரு டன், அஸ்டா மிளகு, 9,100 டாலரை தாண்டியுள்ளது. இது, இரு வாரங்களுக்கு முன், 8,200 டாலராக இருந்தது.இந்தோனேஷியாவில், மிளகு அறுவடை இன்னும் சூடு பிடிக்கவில்லை. ரமலான் நோன்புக் காலம் முடிந்த பிறகே அறுவடை தீவிரமாகும் என்ற போதிலும்,கடந்த ஆண்டை விட, மிளகு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என, ஐ.பி.சி., தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு, ஏப்., – டிச.,வரையிலான ஒன்பது மாதங்களில், 650 கோடி ரூபாய் மதிப்புள்ள,15,350டன் மிளகு ஏற்றுமதி செய்யப் பட்டது.மிளகு உற்பத்தி குறையும் என்பதால், அதன் விலை மேலும் உயரும்; ஏற்றுமதியும் வீழ்ச்சி காணும் என, ஐ.பி.சி., தெரிவித்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|