பதிவு செய்த நாள்
01 ஜூலை2014
12:19
புதுடில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.69 ரூபாயும், டீசல் விலை, 50 காசுகளும் உயர்த்தப்பட்டது. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலையை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.69 ரூபாய் நேற்று உயர்த்தப்பட்டது. உள்ளூர் வரி அல்லது வாட் வரி சேர்த்து, ஒவ்வொரு நகரத்திலும், இந்த விலை உயர்வில் மாற்றம் இருக்கும்.
அதேபோல், மாதாந்திர அடிப்படையில் உயர்த்தப்படும், டீசல் விலையும் நேற்று லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டது.ஈராக் உட்பட, மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும், அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, கடந்த இரு வாரங்களாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய மத்திய அரசு எடுத்த முடிவின்படி, டீசல் விலை, மாதம் தோறும் சிறிய அளவில் உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை, 17 முறை, டீசல் விலை உயர்த்தப்பட்டும், டீசல் விற்பனையில், லிட்டருக்கு, 3.40 ரூபாய் என்ற அளவில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன.
முன்னர், இந்த இழப்பு லிட்டருக்கு, 2.80 ரூபாயாக இருந்தது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், தற்போது, இழப்பு அதிகரித்துள்ளது.டீசல் தவிர, மண்ணெண்ணெய் விற்பனையில், லிட்டருக்கு, 33.07 ரூபாயும், சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 449 ரூபாயும், எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த எரிபொருட்கள் விற்பனையால் மட்டும், நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.07 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|