பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
13:59

பருவமழை தவறியது, விவசாய வேலையாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விளைச்சல் கோவையில் சரிந்தது. வெளியூர் காய்கறி வரத்தும் குறைந்ததால், விலை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
கோவை நகரிலுள்ள தியாகி குமரன் மார்க்கெட், எம்.ஜி.ஆர்., மொத்த காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்களுக்கு தேவையான கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ், பீட்ரூட் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகள் நீலகிரி மாவட்டத்திலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் வருகின்றன. முருங்கை, கத்தரி, தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய், பீர்க்கன் உள்ளிட்ட உள்ளூர் காய்கறிகள் ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலிருந்தும், வெங்காயம் பெரும்பாலும் கர்நாடகம் மற்றும் மகராஷ்டிராவிலிருந்தும் கொண்டு வரப்படுகின்றன. சமீபநாட்களாக பல காய்கறிகளின் விலை, கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
விலை உயர்வு ஏன்?
கிராமப்புறங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், தினமும் 145 ரூபாய் சம்பளம் கிடைப்பதால், தோட்டங்களில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி, வேலைக்கு வரும் பணியாளர்களுக்கு, அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு மானிய விலையில் உரம் வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடியும், விளைச்சல் குறைய ஒரு காரணமாக கூறப்படுகிறது. கடந்த இரு பருவங்களிலும் எதிர்பார்த்த மழை பொழியாததால் விளைச்சலும் வீழ்ந்துவிட்டது. நிலத்தடி நீரும் அதளபாதாளத்துக்கு போனதால், இன்று கவுரவத்துக்காக விவசாயம் செய்யும் நிலையில், பல விவசாயிகள் உள்ளனர். இதனால், தமிழக வியாபாரிகள் காய்கறிகளுக்கு கர்நாடகம், ஆந்திராவிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை டி.கே. மார்க்கெட் வியாபாரி கார்த்திக் கூறியதாவது: காய்கறி பயிர், காய்த்து அறுவடையாக அதிகபட்சம் 90 முதல் 100 நாட்கள் வரை கால அவகாசம் பிடிக்கும். பயிர் பராமரிப்பு, தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகளுக்கு பணியாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் நீண்ட கால பயிராக, கரும்பு, மஞ்சள், தென்னை, நெல் ஆகியவற்றை பயிரிட்டு, அதில் நல்ல வருவாயை ஈட்டி விடுகின்றனர். இவற்றை பயிர் செய்ய அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் தேவையில்லை. தனியார் நிறுவனத்தினரே பராமரித்து அறுவடையும் செய்து விடுகின்றனர். விவசாயிக்கு கைமேல் வருமானமும் கிடைக்கிறது. இது போன்ற காரணங்களால், காய்கறி உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்து விட்டது. பிற மாநிலங்களை சார்ந்திருக்கும் இந்த நிலை நீடித்தால், கோவை மாவட்டத்தில் காய்கறி விலை இன்னும் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் விவசாயத்தை
ஊக்குவிக்க, அம்மாநில அரசுகள், விவசாயிகளை நாடிச்சென்று பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. விளைபொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கின்றனர். தமிழகத்திலும் இதுபோன்ற வாய்ப்புகள் வரவேண்டும்.இவ்வாறு, கார்த்திக் கூறினார்.
கோயம்புத்தூர்கார அம்மனீ...
நெலம இப்படியே போச்சுன்னு வையி, காய்கறிக வாங்கறதுக்குக்கூட, பாங்க்குல கடன் வாங்கோணுமாக்கும்... வெங்காயத்த பதுக்கின வேவாரி வீடுகள்ல, அதென்னமோ ஐ.டி., ரெய்டெல்லாம் நடக்குதாம். இன்னும், என்னென்ன நடக்குமோன்னு பயமா இருக்குது... அதனால, இத படிச்சுட்டு, மனச கொஞ்சமாட்டம் திடப்படுத்திக்கோ, எதிர்காலத்துல, இப்படியெல்லாம் செய்தி வந்தாலும் வருமாக்கும்!
பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள், பீரோ லாக்கரிலிருந்த கால் கிலோ கத்தரி, அரை கிலோ வெங்காயத்தை, கத்திமுனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆலாந்துறை விவசாயி வீட்டில் விடிய, விடிய ரெய்டு நடத்திய டில்லி வருமானவரி அதிகாரிகள், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கிலோ அவரைக்காயை அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியில் தென்னை மரம் ஏறி, தேங்காய் திருடிய பயங்கரவாதியை, அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றனர். சென்னையில் நேற்று நடந்த விழாவில், வீரர்களை வெகுவாக பாராட்டிய டி.ஜி.பி., பரிசும் வழங்கினார்.
லைசென்ஸ் இல்லாமல் 'காலிபிளவர்' விற்போரை, என்கவுன்டரில் போட்டுத்தள்ள, எல்லை பாதுகாப்பு படை, தமிழகம் விரைந்துள்ளதாக, மத்திய விவசாய அமைச்சர் டில்லியில் நேற்று, நிருபர்களிடம் தெரிவித்தார்.
கணவனுக்கு, வெண்டைக்காய் வாங்கி, குழம்பு வைக்க முடியவில்லையே என்ற, மனவேதனையுடன், மூன்று மாதமாக விரக்தியில் இருந்த மனைவி, தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெறுகிறார்.
முருங்கை காயை, ஒட்டன்சத்திரத்திலிருந்து கோவை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல, பீரங்கிப்படை பாதுகாப்பு கேட்டு, திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ்முன், 30௦ ஆயிரம் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தனியார் மருத்துவமனை டாக்டரை, அடித்து உதைத்த வழக்கில் கைதான ஆசாமி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'தினமும் ஆப்பிள் சாப்பிடுமாறு அறிவுறுத்தி, என் ஆத்திரத்தை கிளப்பிவிட்டார்' என, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
டில்லியில் இருந்து கோவை வந்த விமானத்தில், வயிற்றில் மறைத்து, 300௦௦ கிராம் பட்டாணியை கடத்தி வந்த, வங்கதேச வாலிபரை, குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
தற்போது விற்கும் விலைவாசியை, சிஞ்சித்தும் மனதில் கொள்ளாமல், மல்லித்தழை ரசம் கேட்டு, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமில்லாமல் மனைவியை கொடுமைப்படுத்திய கணவர், மாமனார், மாமியாருக்கு, கோர்ட், இரண்டாண்டு கடுங்காவல்
தண்டனை விதித்தது.
ஊட்டி பழமுதிர் நிலையத்தில், 'காபூல் மாதுளை' கேட்ட என்னை, ஆப்கன் பயங்கரவாதி போலக்கருதி, கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, போலீசில் புகார் அளித்துள்ளார் அப்பாவி இளைஞர்.
வீடு, கார், காய்கறி வாங்க கடன் வழங்கப்படும் என, ஊட்டியில் நேற்று நடந்த பிரஸ்மீட்டில், 'பாங்க் ஆப் கோவை' பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.
ஒரு கடை முன் அறிவிப்பு பலகை: ஒரு கிலோ தக்காளி, ௨ கிலோ பீர்க்கன், கால் கிலோ இஞ்சி வாங்கும் நபர்களில் இருவர், குலுக்கல் முறையில் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுவர்.
- நமது சிறப்பு நிருபர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|