பதிவு செய்த நாள்
06 ஜூலை2014
16:15
ஊட்டி :வாசனை திரவியப் பொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து, அன்னிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய, 'ஜெரேனியம்' சாகுபடிக்கு, அரசின் ஊக்குவிப்பு இல்லாததால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நறுமணப் பொருட்களின் வரிசையில், 'ஜெரேனியம்' என்ற தாவரத்தின் மலர்களில் இருந்து தயாரிக்கப்படும், நறுமண தைலம் மற்றும் அவற்றை கொண்டு தயாரிக்கப்படும், பலவகை வாசனை திரவியப் பொருட்களுக்கு, மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
குறிப்பாக, மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட பெரு நகரங்களிலும், வெளி நாடுகளில் நட்சத்திர ஓட்டல்கள், பல்பொருள் அங்காடிகளில், இத்தகைய வாசனை திரவியங்கள் அதிகளவில் விற்கப்படுகின்றன. தவிர, ஜெரேனியம் தாவரத்தின் மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் 'பன்னீர்' என்ற நறுமணப் பொருள், திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், ஜெரேனியம் தயாரிப்பு நறுமணப் பொருட்களுக்கு கிராக்கி அதிகம். அத்தகைய தாவரங்கள், கடல் மட்டத்தில் இருந்து, 2,000 அடி உயரத்துக்கு மேல் உள்ள மலைப்பாங்கான இடங்களில் நன்கு வளரும். நீலகிரி மாவட்டத்தில், பல இடங்களில், பல ஏக்கர் பரப்பளவில், ஜெரேனியம் செடிகள் வளர்க்கப்பட்டு வந்தன.
மாநில அரசு, தோட்டக்கலை துறை மூலம், 'நறுமணப் பொருட்கள் வளர்ப்பு திட்டம்' என்ற பெயரில், ஜெரேனியம், குருமிளகு, ஏலக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, மானியம் உட்பட சலுகைகளை வழங்கி வந்தன.
சில ஆண்டுகளுக்கு முன், நறுமணப் பொருட்கள் வளர்ப்பு திட்டத்தை, மாநில அரசு ரத்து செய்தது. விளைவாக, விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த சலுகை மற்றும் உதவிகளும் நிறுத்தப்பட்டன. இதனால், ஜெரேனியம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது ஊட்டி சின்ன குன்னூர், கவரட்டி, காவிலோரை உள்ளிட்ட சில கிராமங்களில், மிகக் குறைந்த பரப்பளவில் மட்டுமே, ஜெரேனியம் சாகுபடி நடக்கிறது.
விவசாயிகள் சிலர் கூறுகையில், 'நீலகிரியில் தேயிலை மற்றும் கொய்மலர் சாகுபடிக்கு
மாற்றாக உள்ள, 'ஜெரேனியம்' சாகுபடியை அரசு ஊக்குவித்தால், எங்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமையும்' என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|