பதிவு செய்த நாள்
14 ஜூலை2014
00:45
மும்பை:கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சென்ற ஜூன் மாதம், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், 7,309 கோடி ரூபாய் முதலீடு செய்யப் பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு, சென்ற மாதம் தான், இந்த அளவிலான முதலீடு குவிந்துள்ளது.
அன்னிய நிறுவனங்கள்:பங்குச் சந்தையின் எழுச்சி காரணமாக, பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், தொடர்ந்து மூன்று மாதங்களாக, முதலீடு அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு, ஏப்ரலில், இவ்வகை திட்டங்களில், 208 கோடி ரூபாயாக இருந்த முதலீடு, மே மாதம், 2,452 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் குவிந்த மொத்த முதலீட்டை (8,708 கோடி ரூபாய்) விட, நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் அதிக அளவில் முதலீடு (8,935 கோடி ரூபாய்) செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்ற ஜூன் மாதம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 3 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், அம்மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இணைந்துள்ள நீண்ட கால முதலீட்டாளர்கள் பலர், லாப நோக்கம் கருதி, கணக்கை முடித்து வெளியேறி உள்ளனர்.
குறுகிய காலம்:அதே சமயம், மே மாதத்தில் கணக்கு முடிக்கப்பட்ட தொகையை (430 கோடி ரூபாய்) ஒப்பிடும் போது, அது, ஜூன் மாதம் 156 கோடி ரூபாய் என்ற அளவில் குறைவாகவே உள்ளது.குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்யும் ‘லிக்யுட் பண்டு’ திட்டங்களில் இருந்து, சென்ற ஜூன் மாதம், 67,697 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது; மே மாதம், 22,010 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஜூன் மாதம், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் மொத்த திட்டங்களின் சொத்து மதிப்பு, 9.74 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய மே மாதம், 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு மடங்கு:பரஸ்பர நிதி திட்டங்களில் தொடர்ந்து முதலீடு அதிகரித்து வந்தால், அடுத்த 2–3 ஆண்டு களில், பரஸ்பர நிதியங்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, தற்போதுள்ளதை விட, இரு மடங்கு அதிகரிக்கும் என, இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
கடன்பத்திர முதலீடு சரியுமா ?:மத்திய பட்ஜெட்டில், கடன்பத்திர முதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கும் வருவாய்க்கு, 10 சதவீதமாக இருந்த மூலதன ஆதாய வரி, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நீண்ட கால முதலீடு என்பது, ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடன்பத்திர திட்டம் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், இவ்வகை முதலீடுகளில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளதால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என, பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|