பதிவு செய்த நாள்
28 ஆக2014
10:09
புதுடில்லி: 'மாதம் ஒரு சிலிண்டர் தான் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது' என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், மாதம் ஒரு சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேவைப்பட்டால், கூடுதலாக ஒரே மாதத்தில் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுவதால், அரசுக்கு மானியச் சுமை அதிகரிக்கிறது என தெரிவித்து, 'ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர் தான் மானிய விலையில் கிடைக்கும்; தேவைப்பட்டால், கூடுதல் விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்' என, முந்தைய மன்மோகன் சிங் அரசு அறிவித்தது.அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடந்த பிப்ரவரியில், 'ஆண்டுக்கு, 12 சிலிண்டர், மானிய விலையில் வழங்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதன் படி, ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டது.
இதை நேற்று, மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. 'ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் தான் என்றில்லை; தேவைப்பட்டால், ஒரே மாதத்தில் ஒன்றிரண்டு சிலிண்டர் கூட பெற்றுக் கொள்ளலாம். எனினும், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளது.
பிரதமர், நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் முந்தைய முறை மாற்றியமைக்கப்படுகிறது. சில நேரங்களில் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படும். குறிப்பாக, பண்டிகை காலங்களில் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படும் போது வழங்க முடியாத நிலை இருந்தது.இதை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|