பதிவு செய்த நாள்
30 ஆக2014
12:12
புதுடில்லி: மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த இரண்டரை ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 4.7 சதவீதமாக இருந்தது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் (சி.எஸ்.ஓ.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், சுரங்கம், தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன.குறிப்பாக, தயாரிப்பு துறையின் உற்பத்தி, 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2013 - 14ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 1.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டிருந்தது.
இதே போன்று, சுரங்க துறை உற்பத்தியும், 2.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இத்துறையின் உற்பத்தி, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 3.9 சதவீதம் சரிவடைந்திருந்தது. கணக்கீட்டு காலாண்டில், அதிகபட்சமாக நிதி சேவைகள் துறை, 10.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, மின்சாரம், எரிவாயு துறைகள் உற்பத்தி தலா, 10.2 சதவீதமும், கட்டுமான துறை, 4.8 சதவீதமும், ஓட்டல், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துறை, 2.8 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன. அதேசமயம், வேளாண் துறை உற்பத்தி வளர்ச்சி, 4 சதவீதத்திலிருந்து, 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என, சி.எஸ்.ஓ., புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|