பதிவு செய்த நாள்
07 செப்2014
01:40
நாமக்கல்: வேளாண் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகளால், நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, மத்திய அரசு, தனிநபர் காப்பீட்டு திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதனால், எந்த பயிரை, எந்த பகுதியில் பயிரிட்டாலும், காப்பீடு பெறப்பட்டு, அதற்கான இழப்பீடு தொகை கிடைக்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தேசிய அளவில், மாறுபட்ட சீதோஷ்ண நிலை, வானிலை மாற்றம், இயற்கை சீற்றம், வேளாண் பொருளை சந்தைப்படுத்துவதில் நிச்சயமற்ற நிலை, போதிய நிதி வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால், வேளாண் தொழிலில் ஈடுபட்டோர், பல்வேறு சவால் மற்றும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
தேசிய வேளாண் காப்பீடு:இதுபோன்ற பிரச்னைகளால், சிறு மற்றும் குறு விவசாயி, மானாவாரி சாகுபடி விவசாயிகள் ஆகியோர், ஒவ்வொரு ஆண்டும், பெரும் இன்னல்களை சந்தித்து, தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் பொருட்டு, மத்திய, மாநில அரசுகளின் சார்பில், காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதில், தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டு திட்டம், தென்னை காப்பீடு திட்டம் உள்ளிட்ட பயிர்காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அவ்வாறு, விவசாயியால் காப்பீட்டு தொகை செலுத்திய பின், அவற்றை பெறுவதிலும், மதிப்பீடு செய்வதிலும், பல்வேறு பிரச்னைகளை, விவசாயிகள் சந்திக்கின்றனர்.நிர்ணயம்:குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்யப்படும், வேளாண் பொருட்களை அடிப்படையாக கொண்டு, பிர்கா வாரியாக, காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், விவசாயிகள், தன்னிச்சையாக எந்த பயிரையும், தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டு, காப்பீடு செய்ய முடியாது.
‘சேட்டிலைட்’ மூலம் மத்திய, மாநில அரசால் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட விவசாயி, காப்பீட்டு திட்டத்தில் நுழைய முடியும். மற்றபடி, வேறு பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, காப்பீடு வசதி கிடைக்காது.
எந்த பயிரை பயிரிட்டாலும், காப்பீடு செய்து தர வேண்டும். அதற்கான இழப்பீடு தொகையும், முழுமையாக வழங்க வேண்டும் எனக்கூறி, பல ஆண்டுகளாக, விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக அரசு, 2013 – -14ம் நிதியாண்டில், விருதுநகர் மற்றும் வேலுார் மாவட்டத்தில், முன்னோடி திட்டமாக, தனிநபர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த முடிவு செய்தது.
இருப்பினும், காப்பீடு என்பது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால், அறிவிக்கப்பட்ட திட்டம் செயல்படுத்த முடியாமல், கிடப்பில் இருந்தது. இந்நிலையில், தற்போதைய மத்திய அரசு, தனிநபர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு, அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து, தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட, சில மாவட்டங்களில், பரிச்சார்த்த முறையில் செயல்படுத்த, வேளாண் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்காக, சில குறிப்பிட்ட வேளாண் வட்டார விவசாயிகளிடம், தனிநபர் காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு மற்றும் திட்டப்பயன்களை சொல்லி, காப்பீட்டில் சேர அழைப்பு விடுத்து உள்ளனர்.
தனிநபர் காப்பீடு:இதுகுறித்து, வேளாண் காப்பீட்டு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகத்தின் சார்பில், விவசாயிகள் பயிரிட்ட குறிப்பிட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பகுதி வேளாண் பொருட்களுக்கு மட்டுமே, காப்பீடு வசதி செய்யப்பட்டது.தற்போது, மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதால், பரிச்சார்த்த முறை, ஒவ்வொரு மாவட்டத்திலும், தலா ஒரு பிர்கா வீதம், தனிநபர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை, அரசிடம் இருந்து விரைவில் வெளியிடப்படும். இதனால், எந்த பயிரும் பயிரிட்டு இழப்பு ஏற்பட்டால், இழப்பீடு பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|