பதிவு செய்த நாள்
10 செப்2014
00:38
புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (ஆக.,–ஜூலை), இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 76.90 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) சரிவடையும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டி.ஏ.,) தெரிவித்துள்ளது.
சுணக்கம்:கடந்தாண்டு இதே பருவத்தில், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி,1.17 கோடி பொதிகளாக அதிகரித்து காணப்பட்டது. அதனுடன் ஒப்பிடும் போது, நடப்பு பருவத்தில், பருத்தி ஏற்றுமதி, 35 சதவீதம் சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு, சீனா, வங்கதேசம் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில், பருத்திக்கான தேவை மிகவும் குறைந்து போயுள்ளதே, முக்கிய காரணமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த ஜூன் மாதம் முதல், உலக நாடுகளுக்கான இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி சுணக்கம் கண்டு வருகிறது.
குறிப்பாக, சென்ற ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில், சீனாவிற்கான, இந்தியாவின் ஒட்டு மொத்த பருத்தி ஏற்றுமதி, 4.85 லட்சம் பொதிகளாக சுருங்கியுள்ளது.மேலும், இது, ஆகஸ்ட் மாதத்தில், 68 ஆயிரம் பொதிகளாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்டில், சீனாவிற்கான இந்தியாவின் பருத்தி ஏற்றுமதி, 2,60,571 பொதிகளாக மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
கையிருப்பு:இதுகுறித்து, ஜவுளி ஆலைகள் கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கையிருப்பு அதிகமாக உள்ளதால், சீனா, பருத்தி இறக்குமதியில் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளது. மேலும், கையிருப்பை பெருமளவு குறைக்கும் வகையில், சீனா, பருத்தியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, விற்பனை செய்யப்படும் நிலையில், சர்வதேச அளவில், பருத்தி விலை சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று கூறினார்.
யு.எஸ்.டி.ஏ., மதிப்பீட்டின்படி, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், இந்தியாவின் பருத்தி உற்பத்தி, 3.78 கோடி பொதிகளாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய சந்தைப் பருவ உற்பத்தியுடன் (3.91 கோடி பொதிகள்) ஒப்பிடுகையில், 13 லட்சம் பொதிகள் குறைவாகும்.அதேசமயம், நடப்பு பருவத்தில், உள்நாட்டில் பருத்தி பயன்பாடு, 3.01 கோடி பொதிகளாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பருத்தி ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு முதன்மையானதாக உள்ளது. இதையடுத்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|