பதிவு செய்த நாள்
28 செப்2014
01:15
கொச்சி:நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்., – ஜூலை), நாட்டின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, 4,339 கோடி ரூபாயை (72.10 கோடி டாலர்) எட்டியுள்ளது. இதன்படி, 2,71,280 டன் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகி உள்ளன என, இந்திய நறுமணப் பொருட்கள் வாரியத்தின் தலைவர் ஜெயதிலக் தெரிவித்துள்ளார்.இது, கடந்த 2013 – 14ம் நிதியாண்டில் முறையே, 3,892 கோடி ரூபாய் (68.28 கோடி டாலர்), மற்றும் 2,46,060 டன் என்ற அளவில் இருந்தன.
தேவை அதிகரிப்பு:ஆக, கணக்கீட்டு காலத்தில், நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 10 சதவீதமும், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 11 சதவீதமும் மற்றும் டாலர் மதிப்பின் அடிப்படையில், 6 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.மதிப்பீட்டு காலத்தில், ஒட்டுமொத்த நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியில், மிளகு, இஞ்சி, மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில், இந்திய நறுமணப் பொருட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. ஏற்றுமதி பங்களிப்பில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் முக்கிய பங்களிப்பை கொண்டு உள்ளன.
இதன் காரணமாக, நடப்பு நிதியாண்டில், நறுமணப் பொருள் ஏற்றுமதி, முன் எப்போதும் இல்லாத அளவில் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்றுமதி வாயிலான அன்னியச் செலாவணி வருவாயில், மிளகாய் மற்றும் புதினா ஆகியவற்றின் பங்களிப்பு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
மிளகு:நறுமணப் பொருட்களின் ராஜா என்று அழைக்கப்படும், மிளகிற்கான தேவை சிறப்பான அளவில் உயர்ந்ததையடுத்து, இதன் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 10 சவீதமும், மதிப்பின் அடிப்படையில், 41 சதவீதமும் அதிகரித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், மொத்தம், 6,450 டன் மிளகை ஏற்றுமதி செய்ததன் மூலம், 332 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, கடந்தாண்டில் முறையே, 5,870 டன் மற்றும் 235 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மிளகாய்:இதே போன்று, இஞ்சி ஏற்றுமதியும், அளவின் அடிப்படையில், 47 சதவீதம் உயர்ந்து, 4,194 டன்னிலிருந்து, 6,150 டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 23 சதவீதம் உயர்ந்து, 53 கோடியிலிருந்து, 66 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.மேலும், மிளகாய் ஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 93,122 டன்னிலிருந்து, 99 ஆயிரம் டன்னாகவும், மதிப்பின் அடிப்படையில், 10 சதவீதம் அதிகரித்து, 850 கோடியிலிருந்து, 939 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது என, ஜெயதிலக் மேலும் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|