பதிவு செய்த நாள்
11 அக்2014
01:19
மும்பை,:சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, பங்கு சந்தைகள் பெரும் சரிவை கண்டன.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படும் என, சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்தது. இது, சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால், சர்வதேச அளவில் பங்கு வியாபாரம் சுணக்கம் கண்டது. இதன் காரணமாக, இன்போசிஸ் இரண்டாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகள் சந்தை மதிப்பீட்டை விட சிறப்பாக இருந்தும் பங்கு வர்த்தகம் சோபிக்கவில்லை.
தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், இரண்டாவது காலாண்டில், 28.6 சதவீதம் அதிகரித்து, 3,096 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், இதன் ஒட்டுமொத்த வருவாயும், 2.9 சதவீதம் உயர்ந்து, 12,965 கோடியிலிருந்து, 13,342 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்ப துறை தவிர்த்து, இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.குறிப்பாக, உலோகத் துறை குறியீட்டு எண், 4 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதையடுத்து, மோட்டார் வாகனம் (–2.56 சதவீதம்), வங்கி (–1.78 சதவீதம்), பொறியியல் (–1.46 சதவீதம்) ஆகிய துறைகளும் குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவை கண்டன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 339.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 26,297.38 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 100.60 புள்ளிகள் சரிவடைந்து, 7,859.95 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|