பதிவு செய்த நாள்
14 அக்2014
12:27
சேலம் : "ஆன் - லைன் வர்த்தகம், ராட்சத சில்லரை வணிகங்களால், இந்தியாவில், 5 கோடி பேர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது,” என, அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின், ஆட்சிமன்றக் குழு நிர்வாகி ஜெயசீலன் தெரிவித்தார்.
21.5 கோடி : சேலத்தில், அவர் கூறியதாவது: 'சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம்' என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஆன் - லைன் வர்த்தகம், பல்பொருள் சில்லரை வர்த்தகம், ராட்சத சில்லரை வர்த்தகம், கமாடிட்டி எக்சேஞ் ஆகியவற்றால், சிறிய அளவிலான வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில், ஆன் - லைன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 21.5 கோடியாக உயர்ந்து உள்ளது. இதில், 40 சதவீதத்தினர், ஆன் - லைனில் பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இணையதள சில்லரை வர்த்தகம், கடந்த 2007, 2008ல், 15 ஆயிரம் கோடியாக இருந்தது. 2012ல், 47,319 கோடியாக உயர்ந்து, தற்போது, 64 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இணையதள சில்லரை வர்த்தகத்தால், 30 சதவீத வியாபாரிகள் பாதிக்கப்பட்டு விட்டனர். இந்த வர்த்தக பெருக்கம் காரணமாக, மீதமுள்ள, 70 சதவீத வியாபாரிகள், தொழிலை தொடர முடியாத நிலையை நோக்கி உள்ளனர்.
வரிவிதிப்பு : ஆன் - லைன் மூலம் மளிகை, உணவு பொருள், டில்லியில் மட்டும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சேவையை, ஐதராபாத், சென்னை, பெங்களூரு, புனே, சண்டிகர், கோல்கட்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்த போவதாக, ஆன் - லைன் வர்த்தக நிறுவனங்கள் கூறி வருகின்றன. மொத்த கொள்முதலால், உற்பத்தியாளர்களுக்கு போக்குவரத்து செலவு, மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பு ஆகியவற்றுக்கான செலவு குறைவதால், அவை குறைந்த விலையில் பொருட்களை வழங்குகின்றன.
5 கோடி வியாபாரிகள் : ஆன் - லைன் வர்த்தகம் காரணமாக, இந்தியாவில், 5 கோடி வியாபாரிகளும், தமிழகத்தில், 30 லட்சம் வியாபாரிகளும், பரம்பரையாக செய்து வரும்சுயதொழிலான வியாபாரத்தை, தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மத்திய, மாநில அரசுகள், சிறு வியாபாரிகளை காப்பாற்றும் வகையில், மொத்த உற்பத்தியாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலமே, பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்த வியாபாரிகளுக்கு வழங்கப்படும், விலையையே ராட்சத வணிக நிறுவனங்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும்.
ஆன் - லைன் வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் சில்லரை வர்த்தகம், ராட்சத சில்லரை வர்த்தகம், கமாடிட்டி எக்சேஞ் வணிக நிறுவனங்கள், வணிகவரித் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும். வணிகவரிகளை முறையாக செலுத்த வேண்டும். உணவுத் தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட சட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும். விற்பனை விவரங்களை வணிகவரித் துறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை, மத்திய, மாநில அரசு கட்டாயமாக்க வேண்டும்.
போராட்டம் : ஆன் - லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது, அரசுகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விரைவில் ராட்சத வணிக நிறுவனங்கள், ஆன் - லைன் வர்த்தக, பல்பொருள் சில்லரை வர்த்தகம், ராட்சத சில்லரை வர்த்தகம், கமாடிட்டி எக்சேஞ் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|