பதிவு செய்த நாள்
18 அக்2014
23:41
புதுடில்லி:பங்கு சந்தை நிலவரம் நன்கு இருந்ததையடுத்து, நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,–செப்.,), 10 நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 2,796 கோடி ரூபாயை திரட்டி கொண்டுள்ளன.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 7 நிறுவனங்கள் 2,163 கோடி ரூபாயை திரட்டியிருந்தன. ஆக, உரிமை பங்கு வெளியீட்டின் மூலம், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 29 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, பிரைம் டேட்டாபேஸ் நிறுவன ஆய்வறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இந்தியன் ஓட்டல்ஸ் அதிகபட்சமாக, 1,000 கோடி ரூபாயை உரிமை பங்கு வெளியீடு வாயிலாக திரட்டி கொண்டுள்ளது.
இதையடுத்து, என்.சி.சி., (599 கோடி), ஐ.எல்., அண்டு எப்.எஸ்., டிரான்ஸ்போர்ட்டேஷன் (525 கோடி) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.பெரும்பாலான நிறுவனங்கள், நடைமுறை மூலதன தேவைகளுக்காக, நிதியை திரட்டி கொண்டுள்ளன. சந்தை நிலவரம் நன்கு உள்ளதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இனிவரும் மாதங்களில், உரிமை பங்கு வெளியீடு விறுவிறுப்படையும் என, பிரைம் டேட்டாபேஸ் நிர்வாக இயக்குனர் பிரனவ் ஹால்டியா தெரிவித்தார்.
இதனை எடுத்துக்காட்டும் விதமாக, தற்போது இரண்டு நிறுவனங்கள், உரிமை பங்கு வெளியீட்டின் மூலம், 1,611 கோடி ரூபாய் திரட்டுவதற்கு ‘செபி’ யின் அனுமதி கிடைத்துள்ளது. மேலும், ஆறு நிறுவனங்கள், 2,187 கோடி ரூபாய் திரட்ட, அனுமதிக்காக காத்திருக்கின்றன. கடந்த, 2013–14ம் நிதியாண்டில், உரிமை பங்கு வெளியீட்டின் மூலம், நிறுவனங்கள், 4,573 கோடி ரூபாயை திரட்டியிருந்தன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 8,945 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|