பதிவு செய்த நாள்
12 டிச2014
01:26

ஐந்து கிலோ காஸ் சிலிண்டருக்கும், மத்திய அரசு மானியம் வழங்க இருப்பதால், அதன் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு (14.20 கிலோ); வணிகம் (19 கிலோ) என, இரண்டு, வகை காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.கல்லுாரி மாணவர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளிகள், விடுதியில் தங்கியுள்ள இளைஞர்கள், புதிதாக காஸ் இணைப்பு பெற, சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, 2013, அக்., மாதம், சென்னை, டில்லி, கோல்கட்டா, மும்பை, பெங்களூரு நகரங்களில், ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை திட்டம் துவக்கப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஏதேனும், ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்து, ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.ஐந்து கிலோ காஸ் சிலிண்டர், ரப்பர் குழாய், ரெகுலேட்டர் விலை, 2,140 ரூபாய். காஸ் நிரப்ப, ஒவ்வொரு முறையும், 504 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
சென்னையில், அடையாறு, அண்ணா நகர் உள்ளிட்ட, 10 இடங்களில் உள்ள, மூன்று எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் பங்க், பல்பொருள் அங்காடிகளில், ஐந்து கிலோ சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. ஐந்து கிலோ சிலிண்டருக்கு, அரசு, மானியம் வழங்கவில்லை. இதனால், 404 ரூபாய் என்ற மானிய விலையில் விற்கப்படும், 14.20 கிலோ சிலிண்டர் விலையை விட, ஐந்து கிலோ சிலிண்டர் விலை அதிகமாக இருந்ததால், பொது மக்களிடம், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனால், ஐந்து கிலோ சிலிண்டர் விற்பனை திட்டம் துவங்கியது முதல், கடந்த, 1ம் தேதி வரை, மூன்று எண்ணெய் நிறுவனங்களிலும், மொத்தம், 700 சிலிண்டர் மட்டும் விற்பனையாகி உள்ளது. இந்நிலையில், ‘155 ரூபாய் என்ற மானிய விலையில், ஆண்டுக்கு, 34, ஐந்து கிலோ சிலிண்டர்கள் வழங்கப்படும். இதை, காஸ் ஏஜன்சிகளிடம், பெற்றுக் கொள்ளலாம்.
வீட்டு வாடிக்கையாளர், ஆண்டுக்கு, 12 (14.20 கிலோ) அல்லது, 34 (5 கிலோ) என, இரண்டு சிலிண்டரில், ஏதேனும் ஒன்றை விருப்பப்படி, பெற்றுக் கொள்ளலாம்’ என்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பார்லிமென்டில், தெரிவித்தார். இதனால், ஐந்து கிலோ காஸ் சிலிண்டருக்கும் மானியம் வழங்க இருப்பதால், இதன் விற்பனை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐந்து கிலோ சிலிண்டருக்கு, மானியம் அளிப்பது குறித்து, மத்திய அரசிடம் இருந்து, முறையான வழிமுறைகள், வந்த பின்தான், எதுவும் கூறமுடியும். அதுவரை, ஐந்து கிலோ சிலிண்டர் மானியம் அல்லாமல் தான் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நமது நிருபர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|