பதிவு செய்த நாள்
16 ஜன2015
10:34
டெல்டா மாவட்டங்களில், ஆந்திரா பொன்னி ரக நெல் விளைச்சல் அமோகமாக உள்ளது. எனவே இந்த ஆண்டு, அரிசி விலை குறையும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.டெல்டா மாவட்டங்களில் இரண்டு ஆண்டுகளாக, குறுவை, சம்பா நெல் சாகுபடி எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த ஆண்டு, சாகுபடி அமோகமாக நடந்துள்ளது.அரசு இலக்கான, 12 லட்சம் ஏக்கர், சாகுபடி பரப்பைத் தாண்டி இருக்கிறது. தற்போது அறுவடை துவங்கியுள்ளது.கடந்த ஆண்டு, விவசாயிகள் பயிரிட்ட ஆந்திரா பொன்னி ரக நெல்லிற்கு, பெரும் வரவேற்பு கிடைத்தது. தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் மொத்த வியாபாரிகள் பலரும், போட்டி போட்டு அவற்றை வாங்கி சென்றனர். இதனால், 60 கிலோ பொன்னி ரக நெல் மூடை, 1,400 ரூபாய்க்கு விலை போனது.அதேபோல இந்த ஆண்டும், ஆந்திரா பொன்னி ரக நெல்லை, விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில், 50 சதவீத அளவிற்கு, ஆந்திரா பொன்னி ரக நெல் பயிரிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
சன்ன ரக நெல்லிற்கு, 100 கிலோ அளவிலான ஒரு குவிண்டாலுக்கு, 1,470 ரூபாய் கொள்முதல் விலையாக, அரசு நிர்ணயம் செய்துள்ளது. கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது.
* தற்போது, வெளி மார்க்கெட்டில் ஆந்திரா பொன்னி ரக அரிசி, பழையது, ஒரு கிலோ, 42 - 43 ரூபாய்; புதியது, 33 - 34 ரூபாய் விற்கப்படுகிறது.
* பழைய ஆந்திரா பொன்னி அரிசி, 75 கிலோ மூடை, 2,600 - 3,200 ரூபாய்; புதியது, 2,250 - 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள், கமிஷன் ஏஜன்ட்கள், நெல் மொத்த வியாபாரிகள், ஆந்திரா பொன்னி ரக நெல், 60 கிலோ மூடையை, 800 - 840 ரூபாய் என, கொள்முதல் செய்ய துவங்கி உள்ளனர்.
நெல் கொள்முதல் விலை குறைந்துள்ளதால், அரிசி விலையும் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, ஒரு கிலோவுக்கு அதிகபட்சமாக, 5 ரூபாய் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, டெல்டா மாவட்டவிவசாயி ஒருவர் கூறியதாவது:சாதாரண ரக நெல்லை, பொதுவினியோக திட்டத்திற்காக, நுகர்பொருள் வாணிப கழகமும்; சன்ன ரக நெல்லை, தனியாரும் கொள்முதல் செய்கின்றனர். தற்போது, மக்களிடம், பொன்னி ரக அரிசி மீதான நாட்டம் அதிகரித்துள்ளது. அதை கருத்தில் கொண்டே, பொன்னி ரக நெல்லை, விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.தனியாரும், சன்ன ரக நெல்லை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். நெல் கட்டுப்படியான விலையில் விற்பனை செய்யப்பட்டு, அரிசி விலை குறைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|