பதிவு செய்த நாள்
04 பிப்2015
06:34
மும்பை:ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்ட அதன் நிதி ஆய்வு கொள்கையில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில், மாற்றம் எதையும் செய்யவில்லை.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி குறுகிய கால அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் (ரெப்போ) கடனுக்கான வட்டி விகிதம், 7.75 சதவீதமாகவும், அதேபோல், வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் (ரிவர்ஸ் ரெப்போ) கடனுக்கான வட்டி விகிதம், 6.75 சதவீதமாகவும் நீடிக்கும்.இதே போன்று, ரொக்க கையிருப்பு விகிதத்திலும் (சி.ஆர்.ஆர்.,), தற்போதுள்ள நிலையே (4 சதவீதம்) தொடரும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜன., 15ம் தேதி முதல், பணவீக்கத்தை குறைப்பதற்கான, எந்த போதுமான புதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டே, குறுகிய கால கடன் வட்டி விகிதத்தில், மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்து உள்ளார்.
குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில், மாற்றம் செய்யப்படாத நிலையில், வங்கிகளின் சட்டப்பூர்வ இருப்பு விகிதம் (எஸ்.எல்.ஆர்.,), 0.50 சதவீதம் குறைக்கப்பட்டு, 22 சதவீதத்திலிருந்து, 21.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, வரும் 7ம் தேதி முதல், அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கிகள் திரட்டும் டிபாசிட்டில், குறிப்பிட்ட சதவீதத்தை பத்திரவடிவில், ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டியது, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுவே, எஸ்.எல்.ஆர்., என்று அழைக்கப்படுகிறது.எஸ்.எல்.ஆர்., குறைக்கப்பட்டதையடுத்து, வங்கிகள், உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, அதிகளவில் கடன் வழங்கலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பங்கு சந்தை:ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், நேற்று காலையில், பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இந்நிலையில், வட்டி விகிதங்களில் தற்போதுள்ள நிலையே தொடரும் என்ற அறிவிப்பால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் சரிவை கண்டது.குறிப்பாக, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், மிகவும் குறைந்த விலைக்கு கைமாறின. வங்கி துறையின் குறியீட்டு எண், 2.61 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறையின் குறியீட்டு எண், 1.43 சதவீதமும் வீழ்ச்சி கண்டன.இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவிற்கு, சரிவுடன் முடிவடைந்தது.
ஏமாற்றம் அளிக்கிறது:ரிசர்வ் வங்கி, முக்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்காதது, ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ தெரிவித்துள்ளது.பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, வீடுகள் விற்பனை அதிகரிக்க, எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும். இதுதவிர, வரி சீர்திருத்தம் உள்ளிட்ட சில சலுகை திட்டங்களை வரும் பட்ஜெட்டில் எதிர்பார்த்து காத்திருப்பதாக, ‘கிரெடாய்’ தெரிவித்து உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|