பதிவு செய்த நாள்
11 பிப்2015
05:02
துாத்துக்குடி : துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இருந்து நேரடியாக துபாய் நாட்டிற்கு சரக்கு போக்குவரத்து நேற்று துவக்கப்பட்டது. இதனால் வீணான கால விரயம், பண விரயம் மிச்சம் செய்யப்பட்டுள்ளது, என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து செல்லும் சரக்கு கப்பல்கள் இது நாள் வரை இலங்கையில் உள்ள கொழும்பு சர்வதேச துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்து தான் வெளி நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து செய்யப்பட்டு வந்தது. வீணான கால விரயமும், பணமும் செலவாகிக் கொண்டிருந்தது.
நேரடியாக போக்குவரத்து: துாத்துக்குடி துறைமுகத்தில் பி.எஸ்.ஏ., சிக்கால் நிறுவனத்தின் சரக்கு பெட்டக முனையம் உள்ளது. தற்போது தக் ஷின் பாரத் சரக்கு பெட்டக முனையம் புதியதாக செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனமும், எஸ்.எஸ்.எல்., குஜராத் நிறுவனமும் இணைந்து, நேரடியாக துபாய் நாட்டிற்கு சரக்கு போக்குவரத்து செய்ய நடவடிக்கை எடுத்தது. இதன் படி தற்போது இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுதான் சரக்கு போக்குவரத்துக் கப்பல்கள் இயங்கி வந்தது.
துாத்துக்குடியில் இருந்து சிறு கப்பல்கள் மூலம் சரக்குகள் எடுத்து செல்லப்பட்டு, கொழும்பு சர்வதேச முனையத்தில் பெரிய கப்பல்களுக்கு சரக்குகள் மாற்றம் செய்து வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. தற்போது நேரடியாக கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லாமல் நேரடியாக கொச்சின் துறைமுகம் சென்று, அங்கிருந்து துபாய் நாட்டிற்கு சரக்குகள் கொண்டு செல்லப்படவுள்ளது.
துவக்கம்: துாத்துக்குடியிலிருந்து துபாய்க்கு நேரடியாக சரக்கு போக்குவரத்துக் கப்பல் எஸ்.எஸ்.எல். குஜராத் மூலம் நேற்று துவக்கப்பட்டது. இதில் 487 சரக்கு பெட்டகங்கள் ஏற்றி செல்லப்பட்டது. இந்த கப்பலில் 24 ஆயிரம் மெட்ரிக் டன் சரக்குகள் கொண்டு செல்லமுடியும். நேற்று இதில் மூன்றில் ஒரு பங்கு சரக்குதான் ஏற்றப்பட்டிருந்தது. முதல் சேவையை துாத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழகத்தலைவர் ஆனந்த சந்திர போஸ் துவக்கி வைத்தார்.
அவர் தெரிவித்ததாவது: துாத்துக்குடி -துபாய் நேரடி சரக்கு போக்குவரத்தால், வீணான கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சென்றால் 10 நாட்களுக்கு பின் தான் துபாய் செல்லமுடியும். நேரடியாக செல்லும் போது கொழும்பில் காத்திருக்க வேண்டிய மூன்று நாட்கள் மிச்சமாகும். அங்கு பயணம் செய்யும் நேரமும் குறையும் என்பதால் ஆறு நாட்களில் துபாய்க்கு சென்று சேரும். கொழும்பு துறைமுகத்திற்கான கட்டணம் கட்ட வேண்டியதில்லை. பணமும் மிச்சமாகும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|