பதிவு செய்த நாள்
19 பிப்2015
13:45
இந்தியாவில், கார்கள் பயன்பாடு தாறுமாறாக அதிகரித்து விட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அதி சொகுசு கார்கள் முதல், சில லட்சம் ரூபாய் விலை கொண்ட சிறிய கார்கள் வரை, பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் போட்டி போட்டு விற்பனை செய்து வருகின்றன.
உலகளவில் பிரபலமான ஆய்வு நிறுவனமான, கே.பி.எம்.ஜி., என்ற நிறுவனம், இந்திய கார்கள் விற்பனை குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகிறது.அந்த வகையில், 2014ம் ஆண்டுக்குரிய இந்த நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. அதில் தெரிய வந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
* கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதை முடிவு செய்து தான், கார் வாங்க திட்டமிடுகின்றனர்.
* வாகனத்தின் ஆயுட்காலம், பாதுகாப்பு வசதிகள், இருக்கை வசதி மற்றும் சவுகரியம் போன்ற விஷயங்களுக்கும் தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு சிறிய கார்கள் விற்பனையின் போது, இந்த விஷயங்கள் தான் முடிவு எடுக்கும் காரணியாக அமையும்.
* தரமான சர்வீஸ் வசதி குறித்தும் இந்திய மக்கள் கவனம் செலுத்துகின்றனர்.
* எரிபொருள் சிக்கனம் தான் இந்திய மக்களின் முக்கிய கவலையாக இருப்பதால், கார் உற்பத்தியாளர்கள், அதற்கு ஏற்றவாறு இன்ஜின் தயாரிக்க கூடுதல் முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
* வாகன பாதுகாப்பு, புகை மாசு கட்டுப்பாடு, எரிபொருள் சிக்கனம், உற்பத்தி குறைபாடுகள், பழுது ஏற்படும் புதிய கார்களை திரும்ப பெறுதல் போன்ற விஷயங்களை ஒழுங்குபடுத்துவதில் வாகன உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
* வாங்கிய சில ஆண்டுகளில், காரை விற்று விட்டு புதிய கார் வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே, வாகனத்தின் ஆயுட்காலம் விஷயத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
* இந்தியாவில், பழைய கார் விற்பனை சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது.எனவே, பழைய கார்களை மாற்றி புதிய கார்கள் அளிக்கும் நிறுவனங்கள் தான் முன்னேறி செல்லும்.
* கார் உட்புறத்தில், புதிய தொழில்நுட்ப வசதிகளின் தேவை அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள், இந்த வசதிகளை கேட்டு பெறுகின்றனர்.
இவ்வாறு, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|