பதிவு செய்த நாள்
24 ஆக2015
16:14
மும்பை : இந்திய பங்கு சந்தைகள் ஏழாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்குசந்தையில், வாரத்தின் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மந்தம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு ரூ.66.40 காசுகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் பங்குசந்தைகளில் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். இதனால் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, மதியத்திற்கு மேல் 1700 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 490.95 புள்ளிகள் சரிந்து 7,809 புள்ளிகளிலும் முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தில் 2477 நிறுவன பங்குகள் சரிவுடனும், 318 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
ஏன் இவ்வளவு சரிவு...?
பங்குசந்தைகள் இந்தளவுக்கு சரிய சில விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன.
1. உலகின் பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆசிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீனாவில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது.
2. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (ரூ.66.48-ஆக) கடுமையாக சரிந்துள்ளது.
3. நடப்பாண்டில் பருவமழையின் அளவு குறைவாக இருப்பதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி குறையும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடி தெரிவித்துள்ளது.
4. நாட்டின் ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10.3 சதவீதம் மட்டுமே உள்ளது. மதிப்பீட்டில் 23.13 பில்லியன் டாலராக இருக்கிறது. மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் 12.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
5. கச்சா எண்ணெய் உற்பத்தில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருக்கிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் சரிவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிவிலேயே இருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
7 லட்சம் கோடி இழப்பு: பங்குசந்தையில் இன்று ஒரேநாளில் ஏற்பட்ட சரிவால் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குசந்தை சந்தித்திருக்கும் மிகப்பெரிய சரிவு இது.
ரகுராம் ராஜன் கருத்து: இதுப்பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்: உலகளவில் இத்தகைய சூழல் நிலவுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு தான். நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலராக உள்ளது, தேவைப்பட்டால் இது பயன்படுத்தப்படும். பங்குசந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும். பணவீக்கம் சரிவு போன்ற விஷயங்களால் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
அருண் ஜெட்லி கருத்து: உலகில் எங்காவது ஒரு சில நாடுகளில் ஏற்படும் பிரச்னை மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா, இதுபோன்ற சவால்களை நிறைய எதிர்கொண்டு வருகிறது. இந்த சரிவு தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இது மாறும். குறிப்பாக பருவமழையால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்புகிறேன். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பங்குசந்தைகளை உற்று நோக்கி கவனித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|