பதிவு செய்த நாள்
10 செப்2015
16:55
சென்னை : எதிர்பார்த்ததை விட 2 மடங்கு அளவுக்கு, சுமார் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக சென்னை, உலக முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு இரண்டு நாள் நடைபெற்றது. விழாவின் நிறைவுநாளில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பேசியதாவது...
2014-15ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது. இப்போது இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு வந்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும். சுமார் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மின் உற்பத்தி துறையில் ரூ.1.07 லட்சம் கோடி முதலீடும், மீன்வளத்துறையில் ரூ.500 கோடியும், விவசாயத்துறையில் ரூ.800 கோடியும், கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கு ரூ.1,900 கோடி முதலீடும் கிடைக்கவுள்ளது. உற்பத்தி துறையில் மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி முதலீடுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் 50 சதவீதம் முதலீடு செய்யப்பட இருக்கிறது. ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும். இணைதளம் வழியாக தொழில் தொடங்க அனுமதி பெறலாம்.
மிகப்பெரிய கார் உற்பத்தி மையமாக சென்னை திகழ்கிறது. ஒரு நிமிடத்தில் 3 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் உலகின் 10 இடங்களில் சென்னை இருக்கிறது.
உலக முதலீட்டாளர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். இனி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்த முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். அடுத்த முதலீட்டாளர் மாநாடு 2017-ல் நடக்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|