பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:30
புதுடில்லி : ‘மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ், அடுத்த ஓராண்டில், 130 நிறுவனங்கள் உருவாகும்; அதன் மூலம், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என, ‘இன்னோவென் கேபிடல்’ நிறுவனத்தின், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:இந்த ஆண்டு, ஸ்டார்ட் அப் துறையில், 1,400 கோடி ரூபாய் முதலீட்டில், 130 நிறுவனங்கள் உருவாகும். அதில், நுகர்வோர் தேவைகளுக்கான வலைதளங்கள், ‘இ – காமர்ஸ்’ எனப்படும், மின்னணு வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு, பெரும்பான்மையாக இருக்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதல் தேர்வாக டில்லி உள்ளது. அடுத்து, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்கள் உள்ளன.
நடப்பு 2015–16ம் நிதியாண்டில், தனிநபர்கள் உருவாக்கிய, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, லாபப் பாதைக்கு திரும்பும். அதுபோல, நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் துவக்கப்பட்டவற்றில், 45 சதவீதத்திற்கும் மேலானவை லாபம் காணும். இது, புதுமையான திட்டங்களில் இறங்கிய நிறுவனங்களை பொருத்தவரை, 22 சதவீதமாக இருக்கும். இந்த மூன்று பிரிவுகளிலும், பெண் நிறுவனர்கள் அல்லது பெண் தலைமை செயல் அதிகாரிகளின் பங்களிப்பு, முறையே, 31, 29 மற்றும் 41 சதவீதம் என்ற அளவில் உள்ளன. பெரும்பான்மையான நிறுவனங்கள் புதிதாக ஆட்களை தேர்வு செய்யும்; அதில், 28 சதவீதம் பேர், தொழில்நுட்ப வல்லுனர்களாக இருப்பர்.
‘ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு, இந்திய கல்வித் திட்டம் இல்லை’ என, ஆய்வில் பங்கேற்றோரில், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் தெரிவித்துள்ளனர்.‘முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டு, அரசியல் மற்றும் வணிகச் சூழல் நன்கு உள்ளது’ என, 65 சதவீதம் பேரும், ‘இந்தாண்டு, மேலும் முன்னேற்றம் இருக்கும்’ என, 76 சதவீதத்தினரும், கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அது என்ன ‘ஸ்டார்ட் அப்?’குறைந்த முதலீட்டில், தொடர்ந்து சந்தை வாய்ப்பை வழங்கக் கூடிய புதுமையான தொழில்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் என, அழைக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பான்மையான நிறுவனங்கள் வலைதள வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|