பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:42
புதுடில்லி : ‘‘மத்திய பட்ஜெட்டில், செயற்கை நுாலிழைக்கான உற்பத்தி வரியை, பாதியாகக் குறைக்க வேண்டும்,’’ என, இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் செகரட்டரி ஜெனரல் பினய் ஜாப் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: வேலைவாய்ப்பில், விவசாயத்தை அடுத்து, ஜவுளித்துறை உள்ளது. இது, தொழில் துறை உற்பத்தியில், 14 சதவீதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில்,4 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. திறனற்ற சாதாரண தொழிலாளர்கள், பெண்கள், கிராமப்புற மக்கள் ஆகியோருக்கு, வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஆகவே, மத்திய அரசு, ஜவுளித்துறைக்கு கூடுதலான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். அதற்கு, ஆடை தயாரிப்பிற்கு அவசியமான, செயற்கை நுாலிழைக்கு விதிக்கப்பட்டுள்ள, 12 சதவீத உற்பத்தி வரியை, 6 சதவீதமாக குறைக்க வேண்டும். இதன் மூலம், நெசவாளர்களின் ஜவுளி உற்பத்தி செலவு குறையும்.
செயற்கை நுாலிழை விலை அதிகமாக உள்ளதால் தான், இந்தியாவில் அதன் பயன்பாடு குறைவாக உள்ளது. உற்பத்தி வரி உயர்வால், செயற்கை நுாலிழையில் தயாராகும் ஆடைகள் விலை அதிகமாக உள்ளது. உற்பத்தி வரியை குறைத்தால், ஜவுளி விற்பனை பெருகும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புடன், தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்திய ஜவுளி ஏற்றுமதி மேலும் உயரும். தொழிலாளர் சட்டத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்தால், வேலை வாய்ப்பு பெருகும்.மத்திய அரசு, இவற்றை கருத்தில் கொண்டு, ஜவுளி துறை வளர்ச்சிக்கான திட்டங்களை, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
செயற்கை நுாலிழை :பருத்தி, பட்டு, கம்பளி போன்றவை இயற்கை நுாலிழைகள். பாலிமர், நைலான் போன்ற, பெட்ரோலிய உப பொருட்கள் மூலம், செயற்கை நுாலிழைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில், பருத்தி, 65 சதவீதம்; செயற்கை நுாலிழை, 35 சதவீதம் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|