பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:27
புதுடில்லி : ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ நிறுவனத்தில் இருந்து, விஜய் மல்லையா வெளியேறியது தொடர்பான ஒப்பந்தத்தில், விதிமீறல் உள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, ‘செபி’ சந்தேகித்து, விசாரணையை துவக்கியுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மதுபான நிறுவனம், டியாஜியோ. இந்நிறுவனம், விஜய் மல்லையா தலைமையிலான, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கணக்கு தணிக்கையில், விஜய் மல்லையா நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால், அவரை தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, டியாஜியோ, ஓராண்டாக வற்புறுத்தி வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, விஜய் மல்லையா அறிவித்தார். அதற்காக அவருக்கு, டியாஜியோ, 515 கோடி ரூபாய் வழங்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல் வெளியானது.விஜய் மல்லையா மீது, பல்வேறு புகார்களை கூறிய நிலையில், திடீரென அவற்றை கைவிட்டதுடன், பெருந்தொகையை கொடுக்க, டியாஜியோ முன்வந்தது, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்த ஒப்பந்தத்தில், இந்திய நிறுவனச் சட்ட விதிமீறல் உள்ளதா என, ‘செபி’ விசாரணையை துவக்கியுள்ளது. அத்துடன், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்கு விலையை செயற்கையாக உயர்த்த, ‘தில்லுமுல்லு’ நடந்ததா என்பது குறித்தும், செபி விசாரிக்க உள்ளது. மேலும், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன நிதிமுறைகேடுகளில், முந்தைய ‘ஆடிட்’ நிறுவனங்களின் பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பங்குகளை பட்டியலிட்டது தொடர்பான விதிமீறல்கள் குறித்து, விஜய் மல்லையாவின் யுனைடெட் புருவரீஸ் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், செபியின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மத்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் அமைச்சகமும், விஜய் மல்லையாவின் ஒப்பந்த பின்னணி குறித்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|