பதிவு செய்த நாள்
01 மார்2016
07:29
இந்திய தொழில் வர்த்தக சபை (ஐ.சி.சி.ஐ.,) கோவை கிளை தலைவர் நந்தகுமார்: தொழிலாளர்களுக்கு முதல் மூன்றாண்டு பி.எப்., தொகையை, மத்திய அரசு செலுத்தும் என்ற அறிவிப்பு, தொழிலாளர்கள் பணிக்கு சேரும் விகிதத்தை அதிகரிக்கும்.
இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன் (ஐ.டி.எப்.,) செயலர் பிரபு தாமோதரன்:தொடர் வளர்ச்சிக்கான பட்ஜெட். செயற்கை பஞ்சு மீதான கலால் வரி, 12.5 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் செந்தில்குமார்:தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தில் நிலுவைத்தொகை, 3,000 கோடி ரூபாய் உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு, 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் சங்கம் (காட்மா) தலைவர் ரவிகுமார்: முத்ரா வங்கி திட்டத்திற்கு, 1.8 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. வங்கி வட்டி விகிதத்தை, 10 சதவீதமாக குறைக்கவில்லை. தொழில் துறையினரின் கோரிக்கைகள் அதிகம் ஏற்கப்படவில்லை.
கோவை மாவட்ட பம்ப்செட், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ்: இரண்டு கோடி ரூபாய் வரை, வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு, கலால் வரி கணக்கு துவக்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த உச்சவரம்பை, ஐந்து கோடி ரூபாயாக உயர்த்திஇருந்தால், சிறப்பானதாக இருந்திருக்கும்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) லட்சுமி நாராயணசாமி:பம்ப் தொழில் துறை கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிடாதது; ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை சலுகைகள் குறைத்துள்ளது உள்ளிட்ட அறிவிப்புகள் ஏமாற்றமளிக்கின்றன. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் பொன்னுசாமி:பட்ஜெட்டில், 1,500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால், திறமையான தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வரவேற்கத்தக்கது.
தொழில் ஆலோசகர் என்.எஸ்.வெங்கட்ராமன்: நாடு முழுவதும், திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க இருப்பதால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், திறமை வாய்ந்த புதிய தொழில் முனைவோர் கிடைப்பர். இயற்கை எரிவாயு, நிலம் மற்றும் கடலில் கிடைக்கிறது. தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், நிலத்திற்கு அடியில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு உள்ளது. ஆனால், பட்ஜெட்டில், கடலில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், இயற்கை எரிவாயு சார்ந்த தொழில்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
ரவிசந்திரன் புருஷோத்தமன், தலைவர், ‘டேன்பாஸ் இந்தியா:’ உணவு பதப்படுத்துதல் துறையில், 100 சதவீத அன்னிய முதலீடு, விவசாயத் துறைக்கு பெரிதும் ஊக்கம் தரக்கூடியது. இதுபோல், இயற்கை விவசாயத்திற்கும் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது, வட கிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளுக்கு, வரப்பிரசாதமாக அமையும்.
சந்திரமோகன், முதன்மை நிதி அலுவலர், ‘டாபே:’வரும், 2019க்குள், அனைத்து கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்பது, உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதுபோல், நெடுஞ்சாலைகளுக்கு ஒதுக்கியிருக்கும் அதிக நிதி, விவசாயிகள் தங்கள் பொருட்களை, நகரங்களுக்கு விரைவாக கொண்டுவர உதவும்.
நரசிம்மன், தலைவர், ‘பிரேக்ஸ் இந்தியா:’ விவசாயம் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பல சலுகைகள், பொருளாதாரத்திற்கு மறைமுகமாக பெருமளவில் ஊக்கம் அளிக்கும். ஆனால், கார்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் புதிய வரிகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|