பதிவு செய்த நாள்
01 மார்2016
07:34
புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த, 2016 – 17ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், ஒட்டுமொத்த தொழில் துறையினரின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இருந்ததாக, பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்த, 2016 – 17ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், ஒட்டுமொத்த தொழில் துறையினரின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இருந்ததாக, பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
டில்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டத்தில் முழுமையாக பிரதிபலித்தது. இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், பஜாஜ் ஆட்டோ தலைவர் ராகுல் பஜாஜ், ஹீரோ கார்ப்பரேட் சர்வீஸ் நிறுவன தலைவர் சுனில் காந்த் முன்ஜால், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் செயல் துணை தலைவர் ஷோபனா காமினேனி உட்பட, 40க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரை, பிரம்மாண்டமான திரையில் ஒளிபரப்பானது. தொடக்கத்தில், வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு குறித்து அருண் ஜெட்லி உரையாற்றிய போது, ஒரு சிலர் குறிப்பெடுத்துக் கொண்டனர். ‘நிதி பற்றாக்குறை, 3.5 சதவீதமாக குறைக்கப்படும்’ என, கூறிய போது, ராகுல் பஜாஜ், கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.அதே சமயம், ‘பண்டிட் தீனதயாள் உபாத்யாயா, குருகோவிந்த் சிங் ஆகியோரின் பிறந்த நாள் விழாவிற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்’ என அறிவித்த போது, சிலர் அதை ரசிக்கவில்லை.
‘டிவிடெண்டு’க்கு, 10 சதவீத வரி அறிவிப்பு வெளியான போது கூட்டத்தில் ஒருவித அசாதாரண சூழல் நிலவியது. ஆனால், ‘வரிகளை எளிமையாக்கி, வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்யப்படும்’ என, அருண் ஜெட்லி கூறிய போது பலர் தலைநிமிர்ந்தனர். பட்ஜெட் உரை முடிந்த பின், செய்தியாளர்களை சந்தித்த தொழிலதிபர்கள், வரி விதிப்பு, ஏற்றுமதியில் சரிவு உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினர். சிலர் கருத்து கூற விரும்பாமல் வெளியேறினர்.
ஏழை மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஆதரவான பல விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இருந்ததால் குறை கூறவும் மனதில்லாமலும், அதே சமயம், தொழில் துறையின் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் அமைதியும் காத்தனர். இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் சுமித் மசூம்தாரிடம், ஒரு நிருபர், ‘இந்த பட்ஜெட், மக்களுக்கு அதிகமாகவும்; தொழில் துறைக்கு குறைவாகவும் செய்தது போல் உள்ளதே’ என கேட்டார்.
அதற்கு, சமித் மசூம்தார், ‘‘இது, வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட முன்னேற்றத்திற்கான பட்ஜெட்; மிகவும் நல்ல பட்ஜெட்,’’ என்றார்.
மொத்தத்தில் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு வந்திருந்த தொழிலதிபர்களின் உதடுகள் உச்சரித்தது வேறாகவும், உள்ளம் உச்சரிக்க விரும்பியது வேறாகவும் இருப்பதைப் போலவே தோற்றம் காட்டியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|