பதிவு செய்த நாள்
07 மார்2016
07:36
பி.எப்., நிதி தொடர்பான வரி விதிப்பு பெரும் எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘ஆன்யுவிட்டி’ எனப்படும் ஓய்வூதிய திட்டங்கள் மீதும் கவனம் திரும்பி உள்ளது.
எப்போதும் போலவே, மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு தொடர்பான எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. ஆனால், இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், மத்திய தர மக்கள் ஒரு பக்கம் ஏமாற்றம் அடைந்தாலும்; இன்னொரு பக்கம், பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கப்பட திட்டமிடப்பட்டிருப்பது தொடர்பான அறிவிப்பு தான் அவர்களை திகைப்பில் ஆழ்த்தியது. பி.எப்., நிதியை விலக்கி கொள்ளும் போது, 40 சதவீதத்திற்கு வரி விலக்கு உண்டு, மீதி, 60 சதவீத தொகை, வரிக்கு உட்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது; இது எதிர்ப்புக்கு இலக்கானது. இதையடுத்து. பி.எப்., நிதி முழுவதற்கும் வரி விதிப்பு கிடையாது; ஆனால், 60 சதவீத தொகைக்கான வட்டிக்கு மட்டுமே வரி உண்டு என விளக்கம் அளிக்கப்பட்டது.
மறுபரிசீலனை :பி.எப்., நிதிக்கு வரி விதிப்பது அடிப்படையில் சரியா எனும் கேள்வியும் கேட்கப்படுகிறது. இதனிடையே, பி.எப்., வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், பி.எப்., வசதியை விட தேசிய பென்ஷன் திட்டமான, என்.பி.எஸ்., மேலும் ஈர்ப்புடையதாகுமா? எனும் கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, நிதி அமைச்சகம் அளித்த விளக்கத்தில், பி.எப்.,பின், 60 சதவீத தொகை, ஆன்யுவிட்டி திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டால், முழு வரி விலக்கு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் பாதுகாப்பு அளிக்கும் ஆன்யுவிட்டி வசதியை, அதிக அளவில் பயன்படுத்தச் செய்வதே இந்த வரி விதிப்பு திட்டத்தின் நோக்கம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதிய அம்சம் :ஆன்யுவிட்டி திட்டங்கள் என்பவை அடிப்படையில் காப்பீடு நிறுவனங்களால் அளிக்கப்படும் ஓய்வூதிய திட்டங்கள். இவற்றில் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்தால், ஓய்வு பெற்ற பின் தொடர்ந்து ஓய்வூதியம் பெறலாம்.பொதுவாக ஓய்வூதிய வசதி இல்லாதவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், பாதுகாப்பான வருமானத்தை பெற இவை வழி செய்கின்றன. ஆன்யுவிட்டி திட்டங்களில் இரண்டு வகை இருக்கின்றன. ஒன்று, உடனடி ஆன்யுவிட்டி திட்டம்; இவற்றில், துவக்கத்தில் அதிக அளவிலான ஒற்றை பிரிமியம் செலுத்தினால், அதன் பின் ஓய்வூதியம் பெற முடியும். இந்த தொகை, மாத அடிப்படையில், காலாண்டு அடிப்படையில் அல்லது ஆண்டு அடிப்படையில் வழங்கப்படும்.டிபர்டு ஆன்யுவிட்டி எனப்படும் திட்டத்தில், முதலில் ஒற்றை பிரிமியம் செலுத்தலாம் அல்லது தொடர்ந்து பிரிமியம் செலுத்தலாம். சேரும் தொகைக்கேற்ப பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், ஓய்வூதிய பலனை பெற முடியும்.முதல் திட்டத்தில், ஆரம்பத்திலேயே வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும்.
இரண்டாவது திட்டத்தில், சேரும் தொகைக்கேற்ப தீர்மானிக்கப்படும்.ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், அவருக்கு நிலையான வருமானத்தை அளிக்க வழி செய்வதே ஆன்யுவிட்டி திட்டங்களின் நோக்கமாகும். இந்தியாவில் இப்போது, காப்பீடு நிறுவனங்களே இவற்றை வழங்கி வருகின்றன.பி.எப்., நிதி என்பது வாழ்நாள் சேமிப்பாக இருந்தாலும், ஓய்வுக்கு பின் பலரும் அதை பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திவிடுவதால், ஓய்வூதிய பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுவதாக கருதப்படுகிறது. எனவே அந்த தொகையின் பெரும் பகுதியை ஆன்யுவிட்டி திட்டங்களில் முதலீடு செய்தால், வாழ்நாள் முழுவதும் கவலை இல்லாமல் இருக்கலாம் என கருதப்படுகிறது.
பாதகமான அம்சங்கள் :ஆனால், ஓய்வூதிய நோக்கத்தை மீறி இவை பெரிய அளவில் கவராமல் இருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. முதலில் இந்த வகை திட்டங்களில் கிடைக்கும் வருமானம் குறைவானதாக இருப்பதாக கருதப்படுகிறது. இவை, 6 முதல் 9 சதவீத வட்டி விகித பலனையே அளிக்கின்றன. இவை குறைவு என்பதோடு, பல ஆண்டுகளுக்கு பின் நிலவக் கூடிய பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் மேலும் குறைந்ததாகிவிடும். அது மட்டுமல்லாமல், இந்த வருமானம் வரி விதிப்புக்கு உட்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த பணத்தை நடுவே எடுக்க முடியாது; இதன் மீது கடனும் பெற முடியாது. பாலிசிதாரருக்கு பின் அந்த பலன் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும்.இந்தியாவில் ஓய்வூதியம் சார்ந்த காப்பீடு திட்டங்கள் இன்னமும் முழுமையாக வளர்ச்சி பெறாமல் இருக்கின்றன என்ற கருத்தும் இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|