பதிவு செய்த நாள்
07 மார்2016
07:37
புதுடில்லி : ‘‘மாசு பிரச்னை இல்லாத, 30 தொழில்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தேவையில்லை,’’ என, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை, வண்ணங்களின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரித்து, அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தரம் பிரிப்பதில் சிக்கல்பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: தொழிற்சாலைகள் வெளியிடும் மாசு அளவின் அடிப்படையில் அவற்றை தரம் பிரிப்பதில், தற்போது பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வளிக்கக் கூடிய புதிய திட்டம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இது, குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் அடிப்படையில், எந்தெந்த தொழிற்சாலைகள் அதிக அளவில், மாசுவை வெளியிடுகின்றன; எவை, குறைவான அளவில் கழிவுகளை வெளியேற்றுகின்றன என்பதை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.அதற்கேற்ப, அத்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கலாம். புதிய திட்டத்தின் கீழ், மிக அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்களுக்கு, சிவப்பு வண்ணம் வழங்கப்பட்டுள்ளது. அதைவிட குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்களுக்கு, ஆரஞ்சு வண்ணமும், மிகச் சிறிய அளவில் மாசுவை வெளிப்படுத்தும் தொழில்களுக்கு பச்சை வண்ணமும் வழங்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு, 100 சதவீதம், தீங்கிழைக்காத தொழில்களுக்கு, வெள்ளை நிறம் வழங்கப்படும். இதன் மூலம், அந்தந்த தொழில்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்ளலாம். இதன்படி, அதிக அளவில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும், சர்க்கரை ஆலைகள், அனல் மின் நிலையங்கள், பெயின்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட, 60 தொழில்களுக்கு, சிவப்பு வண்ணம் வழங்கப்படும். நிலக்கரியில் உள்ள மாசுக்களை அகற்றுதல், வாகனங்களை கழுவுதல் உள்ளிட்ட தொழில்களில், நீர் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை தொழிற்சாலைகளுக்கு, ஆரஞ்சு வண்ணம் வழங்கப்படும். அடுத்து, அலுமினியம் பாத்திரங்கள் தயாரிப்பு தொழிற்சாலை, மாவு மில் போன்றவற்றுக்கு, பச்சை வண்ணம் அளிக்கப்படும்.
சுலபக் கடன் கிடைக்கும்:ஏர் கூலர், பருத்தி, கம்பளி ஆடைகள் தயாரிப்பு உள்ளிட்ட, 36 தொழில்கள், மிகக் குறைந்த அளவிற்கே, மாசுவை வெளியிடுகின்றன. ஆகவே அத்தகைய தொழில்களுக்கு, வெள்ளை வண்ணம் வழங்கப்படும். இந்த வெள்ளை வண்ண தொழிற்சாலைகள், சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை. இதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, நிதி நிறுவனங்கள் சுலபமாக கடன் வழங்கும் சூழல் உருவாகும். அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, தயாரிக்கப்பட்ட இந்த புதிய நெறிமுறைகள், தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|