பதிவு செய்த நாள்
08 மார்2016
06:59
புதுடில்லி : ‘வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தின், உள்நாட்டு விற்பனை தொடர்பான விசாரணையை துவக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, குர்கானைச் சேர்ந்த, தினேஷ் தாகூர் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அதன் விவரம்: பெல்ஜியத்தை சேர்ந்த யு.சி.பி., நிறுவனம், ‘புக்லிசைன்’ என்ற மருந்தை தயாரித்து வருகிறது. இது, ‘பசியை துாண்டும் மருந்து’ என, இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு, 2006ல், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அனுமதி அளித்து உள்ளது. பல நாடுகளில் தடை விதிக்கப்பட்ட இந்த மருந்தை, ‘மேன்கைன்டு பார்மா’ என்ற நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதுகுறித்த புகாரை விசாரித்த, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வல்லுனர் குழு, ‘குறிப்பிட்ட மருந்து, ‘பசியை துாண்டும்’ என்பதற்கு ஆதாரமில்லை’ என, தெரிவித்தது. இதையடுத்து, 2013ல், இந்த விவகாரத்தை விசாரித்த பார்லி., குழு, ‘மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, ‘புக்லிசைன்’ மருந்தின் தரம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என, மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது.
மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், ‘விசாரணை எந்த அளவில் உள்ளது’ என, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. அப்போது, ‘இன்னும் விசாரணை துவங்கவில்லை’ என, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் இருந்து பதில் வந்தது. எனவே, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, ‘புக்லிசைன்’ போன்ற மருந்துகள் பற்றிய விசாரணையை உடனடியாக துவக்க, சுகாதார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். தற்போது, மருந்துகளின் தரம் நிர்ணயிக்கப்பட்ட அளவில் இல்லையென்றால், அபராதம் தான் விதிக்க முடியுமே தவிர, கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை. இதனால், தடை செய்யப்பட்ட மருந்துகளை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் விற்கின்றன. இதை தடுக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாதாரண ஆளில்லை:ரான்பாக்ஸி லேபரேட்டரிஸ் நிறுவனத்தின், முன்னாள் ஊழியரான தினேஷ் தாகூர், மூன்று ஆண்டுகளுக்கு முன், அந்நிறுவனத்தின் தர ஆய்வுக் குறைபாடுகளையும், விதிமீறல்களையும் அம்பலப்படுத்தினார். இதையடுத்து, அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கழகம், ரான்பாக்சயின் குறிப்பிட்ட மருந்துகளுக்கு தடை விதித்து, 50 கோடி டாலர் அபராதம் வசூலித்தது. அதில், உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக, தினேஷ் தாகூருக்கு, 5 கோடி டாலர் வழங்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|