பதிவு செய்த நாள்
14 மார்2016
00:49
பணம் சம்பாதிக்க மற்றும் சம்பாதித்த பணத்தை சிறப்பாக நிர்வகிக்க வழிகாட்டும் புத்தகங்களில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு, பணத்துடனான நம் உறவை புரிந்து கொள்ள உதவும் புத்தகங்களில் ஒன்றாக, லைனே டிவிஸ்ட் எழுதியுள்ள, ‘தி சோல் ஆப் மணி’ அமைந்துள்ளது.‘‘வாழ்க்கையில் நீங்கள் முக்கியமாக நினைக்கும் மதிப்பு எவை என்பதை கண்டறிந்து, அவற்றுடன் பணத்தை தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள்,’’ என்கிறார் லைனே டிவிஸ்ட்.
* பெரும்பாலானோர் தங்கள் நிதி வாழ்க்கையையும், தாங்கள் முக்கியமாக கருதும் மதிப்புகள் சார்ந்த ஆன்மாவை மையமாக கொண்ட வாழ்க்கையையும் தனித்தனியே பார்க்கின்றனர். இந்த இரண்டு உலகிலும் அவர்கள் மாறுபட்ட வகையில் நடந்து கொள்கின்றனர். நிதி வாழ்க்கையில் பொறாமையும் சுயநலமும் மேலோங்குகிறது என்றால், ஆன்மாவை மையமாக கொண்ட வாழ்க்கையில், மற்றவர்களை முக்கியமாக கருதுகின்றனர். இந்த இரட்டை நிலை தேவையில்லாதது * பணம் மட்டுமே நிறைவான வாழ்க்கையை அளிப்பதில்லை. பணம் இல்லாமல் இருப்பதால் வாழ்க்கை வெறுமையாகி விடுவதும் இல்லை. எனவே, பணத்தை நிறைவுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் பணக்காரராக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி, உங்கள் மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வது சாத்தியம்* பலரும் எதுவும் போதுமானதல்ல எனும் உணர்வை கொண்டிருக்கின்றனர். அதனால் தான் மேலும் மேலும் பொருட்களை பெற துடிக்கின்றனர். பற்றாக்குறை மனநிலை தேவையில்லை * போதும் என்பதற்கும், அளவற்ற தன்மைக்குமான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். பலரும் அளவற்றத்தன்மை பெற விரும்புகின்றனர். மாறாக, போதும் என்ற உணர்வை கொண்டிருப்பது நல்லது. இதன் மூலம், பணம் சம்பாதிக்கும் நேரம் போக, மிச்சமுள்ள நேரத்தை நமக்கு முக்கியமான விஷயங்களில் செலவிடலாம் * எல்லாருமே தங்கள் நிகர மதிப்பை அதிகமாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும், நிதிநிலையை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுகின்றனர். ஆனால், திருப்தியளிக்க கூடிய நிகர மதிப்பை அடைந்ததுமே, அதை மறந்துவிட்டு, வாழ்க்கையின் அர்த்தமுள்ள விஷயங்களில் ஈடுபடலாம்* முதலீடு செய்யும் பணம் எப்படி வளர்கிறதோ, அதே போல நீங்கள் மதிப்பு வைத்திருக்கும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால், அதன் மதிப்பும் அதிகமாகும். எனவே ஒவ்வொரு வாரமும், நீங்கள் நேரத்தை எதற்காக செலவிடுகிறீர்கள் என கவனித்து, வாழ்க்கையின் மற்ற விஷயங்களிலும் ஈடுபாடு காட்டவும் * பொருளாதார விஷயம் சார்ந்த கனவு இருப்பது போல, சமூக வாழ்க்கை சார்ந்த கனவும் இருக்க வேண்டும். அத்தகைய கனவை கண்டறிந்து அதை உண்மையாக்கும் வகையில் செயல்படுங்கள். அந்த கனவை புரிந்து கொண்டு உரையாடல் மூலம் அதை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கான அடிச்சுவட்டை ஆழ பதிய வைக்கலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|