பதிவு செய்த நாள்
14 மார்2016
00:52
வாடிக்கையாளர்களின் நிதி கணக்குகள் தொடர்பான விவரங்களை, ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் சேவையை வழங்கும் நிறுவனங்கள் அறிமுகமாக உள்ளன. இந்த வகை கணக்கு திரட்டி, சேவைகளை வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை அமைப்பதற்கான வரைவு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
தற்போது சேமிப்பு கணக்கு, வங்கி டிபாசிட்கள், மியூச்சுவல் பண்ட், காப்பீடு திட்டங்கள் போன்றவற்றை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்கள் நிதி சொத்துக்கள் தொடர்பான விவரங்களை ஒரே இடத்தில் பெறும் வசதியில்லாமல் இருப்பதாகவும், கணக்கு திரட்டி சேவை அளிக்கும் நிறுவனங்கள் இந்த இடைவெளியை போக்கும் வகையில் அமையுமென்று இது தொடர்பான அறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.வாடிக்கையாளர்களின் நிதிச்சொத்து கணக்குகள் தொடர்பான விவரங்களை திரட்டி, ஒருங்கிணைத்து, எளிதாக அணுகும் வகையில் இந்த சேவை அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேவையை, ரிசர்வ் வங்கியில் பதிவு செய்து கொண்ட நிறுவனங்கள் மட்டுமே வழங்க முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பெற விண்ணப்பம் மூலம் கோரிக்கை வைக்க வேண்டும்.
முதற்கட்டமாக டிஜிட்டல் வடிவில் உள்ள நிதிச்சேவைகள் மற்றும் ரிசர்வ் வங்கி மற்றும் செபி போன்ற கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் வரும் நிதிச்சேவைகள் தொடர்பான ஆவணங்கள் மட்டும் இவ்வாறு தொகுத்து அளிக்கப்படும்.வாடிக்கையாளர்கள் தங்கள் நிதி சேவை விவரங்களை, ஒரே இடத்தில் பார்க்க இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நிறுவனங்கள் கணக்கு திரட்டி, சேவையை அளிக்க மட்டுமே அனுமதிக்கப்படும்; இவற்றின் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாது. மேலும் இந்த நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் நிதிச்சேவை தொடர்பான விவரங்களை தங்கள் சர்வரில் சேமித்து வைத்திருக்க முடியாது. கடந்தாண்டு ஜூலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், நிதிச்சேவை கணக்குகளை திரட்டி தொகுத்தளிக்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிட்டார்.இந்த வரைவு நெறிமுறைகள் தொடர்பாக, மார்ச், 18ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|