பதிவு செய்த நாள்
17 மார்2016
11:30
புதுடில்லி:'சர்வதேச விமானங்களில், உள்நாட்டுக்குள் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
'வெளிநாடுகளுக்குச் செல்லும், சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகள், இந்தியாவுக்கு வரும் போது, தாங்கள் எடுத்து வரும் பொருட்கள் பற்றிய விவரங்களை, சுங்கத் துறையின் படிவத்தில் தெரிவிக்க வேண்டும்' என்ற நடைமுறை, 2015 முதல் அமல்படுத்தப்பட்டது.சர்வதேச விமானங்களில், உள்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் பயணிகளும், இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருந்தது.
இந்நிலையில், 2015 டிசம்பரில், மத்திய சுங்கம் மற்றும் கலால் வரி வாரியத்தின் கூட்டத்தில், இந்த நடைமுறையை மாற்றி, சர்வதேச விமானங்களில் உள்நாட்டு நகரங்களுக்குச் செல்லும் பயணிகள், சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டாம் என, முடிவு செய்யப்பட்டது.இந்த நடைமுறை, தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதாவது, டில்லி - சென்னை - கொழும்பு விமானத்தில், டில்லியில் இருந்து சென்னை செல்லும் பயணி, சுங்கத்துறை படிவத்தை பூர்த்தி செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள், இந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நடைமுறை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி எவ்வளவு?
*வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகள், 8,000 ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களை, சுங்க வரி இல்லாமல் எடுத்து வரலாம்*ஓராண்டுக்கு மேல் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய ஆண், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும்; பெண், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும் எடுத்து வரலாம்*ரொக்கமாக, 25 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து வரலாம்*இந்த வரம்புக்கு அதிகமாக எடுத்து வரப்படும் பொருட்களுக்கு, 35 சதவீத சுங்க வரியும், 3 சதவீதம் கல்விக்கான, 'செஸ்' வரியும் விதிக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|