பதிவு செய்த நாள்
19 மார்2016
05:03
புதுடில்லி:‘ஆசிய – ஆஸ்திரேலிய பிராந்தியத்தில், இந்தாண்டு வேலைவாய்ப்புகளை வாரி வழங்குவதில், இந்தியா முதலிடம் பிடிக்கும்’ என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், சி.எம்.ஓ., ரிசர்ச் நிறுவனத்துடன் இணைந்து, சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது.
அதன் விவரம்:மத்திய அரசு, தொழில் துறையை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் விளைவாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி சூடுபிடித்து உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் வணிகம் பெருகி வருகிறது. அதையொட்டி, ஏராளமான நிறுவனங்கள், இந்தாண்டு, மிக அதிகளவில் ஊழியர்களை பணிக்கு அமர்த்ததிட்டமிட்டு வருகின்றன.
இதற்கு, வேலைவாய்ப்பு சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவமும் முக்கிய காரணம் எனலாம். இந்தாண்டு, இந்தியா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில், பணியாளர் சேர்க்கை, 13 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால், உலகளவில் நிதித் துறை சார்ந்த பெரிய நிறுவனங்களின் பணியாளர்கள் எண்ணிக்கை, சராசரியாக, 9 சதவீதம் உயரும்.அதேசமயம், இந்திய நிறுவனங்களை பொறுத்தவரை, திறமையான பணியாளர்கள் கிடைப்பது தான் பிரச்னையாக உள்ளது.
விற்பனை மற்றும் ‘மார்க்கெட்டிங்’ துறையில், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. ஆனால், அப்பிரிவுகளில் வல்லுனர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால், நிறுவனங்களால், வளர்ச்சி இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது. இக்கருத்தை, ஆய்வில் பங்கேற்ற இந்திய நிதி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளில், 10க்கு, ஏழு பேர் தெரிவித்து உள்ளனர். சில பிரத்யேக பணிகளுக்கு, வல்லுனர்கள் கிடைக்காமல் நிறுவனங்கள் தவிப்பதாக, 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர். தகவல் தொழில்நுட்பம், நிர்வாகம், பி.பி.ஓ., போன்ற பணிகளுக்கு, ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது.
அதனால், ‘நிறுவனங்கள், ஊதிய உயர்வு வழங்கி, ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளும்’ என்பது, ஆய்வில் பங்கேற்ற பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது.வேலை பார்க்கும் சூழலை மேம்படுத்துவது; பணியாளர்களை பல பிரிவுகளுக்கு மாற்றுவது போன்றவற்றின் மூலமாகவும் நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைத்துக்கொள்கின்றன.
3 நாடுகள்* உலக நாடுகளில் உள்ள, மிகப்பெரிய நிறுவனங்களில், நிதி மற்றும் நிர்வாகத் துறைகளில் பணியாற்றி வரும், அனுபவம் வாய்ந்த மூத்த அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது * இந்தாண்டு, இந்தியா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில், பணியாளர் சேர்க்கை, 13 சதவீதம் அதிகரிக்கும்* இந்திய நிறுவனங்கள், இந்தாண்டு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் என, 83 சதவீதத்தினரும்; பணிபுரிவோர் எண்ணிக்கை, 10 சதவீதம் அதிகரிக்கும் என, 52 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|