பதிவு செய்த நாள்
26 மார்2016
05:34
புதுடில்லி: வலைதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர, பல்வேறுசலுகைகளை வழங்குகின்றன.அவற்றுள், ‘விற்பனை செய்யப்படும் பொருளில் திருப்தி இல்லையெனில், அதை திருப்பி அனுப்பி, பணம் பெற்றுக் கொள்ளலாம்; அல்லது வேறு பொருள் வாங்கிக் கொள்ளலாம்’ என்ற சலுகையும் அடங்கும். இதை பயன்படுத்தி, பொருட்களை திருப்பி அனுப்பி பணம் பெறுவது அதிகரித்து வருவதால், பெரும் இழப்பிற்கு ஆளாகியுள்ளதாக, ‘அமேசான்’ போன்ற வலைதள நிறுவனங்கள் மூலம் பொருட்களை விற்பனை செய்வோர் புலம்புகின்றனர்.
சந்தை போட்டி காரணமாக, ஏராளமான வலைதள நிறுவனங்கள், ‘டிவி, பிரிட்ஜ் போன்ற சாதனங்களுக்கு, மூன்று நாட்களும், ‘ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்’ ஆகியவற்றுக்கு, அதிகபட்சமாக, 45 நாட்களும், சலுகை காலம் வழங்குகின்றன.
இந்த காலத்திற்குள், பொருட்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லையெனில், அவற்றை, திருப்பி அனுப்பி, பணமோ அல்லது வேறு பொருளோ பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகையை, பெரும்பாலும், கல்லுாரி மாணவர்கள்தான், அதிக அளவில் தவறாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அவர்கள், ‘ஸ்மார்ட்போன்’களை ஒரு மாதம் பயன்படுத்தி, அதன் பிறகு, ஏதாவது காரணம் கூறி, திருப்பி அனுப்புகின்றனர். செலுத்திய பணத்தையும் வாங்கி விடுகின்றனர்.
இது குறித்து, ஒரு விற்பனையாளர் கூறியதாவது:சமீப காலமாக, வலைதள நிறுவனங்கள் மூலம் விற்கப்படும், ஸ்மார்ட்போன்களில், சரிபாதி, திரும்ப வந்து விடுகிறது. என் கடையில் அவற்றை விற்பனை செய்திருந்தால், ஒரு நாள் கழித்து வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டேன். வலைதள நிறுவனங்களின் விதிமுறையால், புதிய பொருள், பழைய பொருளாக மாறி, என் கைக்கு வருகிறது. அதுமட்டுமின்றி, சரக்கு போக்குவரத்து செலவும் என் தலையில் விழுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், இந்த வாதத்தை வலைதள நிறுவனங்கள், ஏற்க மறுக்கின்றன. ‘‘ஒருவர் ஒரு நாளில் தன் கடை மூலம் விற்பனை செய்வதை விட பல மடங்கு, வலைதள நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்கிறார். அதில், திருப்பி அனுப்பப்படும் பொருட்கள் 4 சதவீத அளவிற்கே இருக்கும் என்பதால் அதை லாபத்தில் ஏற்படும் இழப்பாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்,’’ என, ஷாப்குளுஸ் டாட் காம் நிறுவனர் சந்தீப் அகர்வால் தெரிவித்துள்ளார். இதனிடையே, வலைதள நிறுவனமான, பே.டி.எம்., பொருட்களை வாங்கி பயன்படுத்திய பிறகு, திருப்பி அனுப்புவதையே வழக்கமாக கொண்டோர் விவரங்களைச் சேகரித்து, அவர்கள் மீண்டும் பொருட்கள் வாங்க முடியாதவாறு, கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|