பதிவு செய்த நாள்
28 மார்2016
07:18
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பை அடுத்து, பி.பி.எப்., திட்டத்திற்கான வட்டியும் குறைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
வருங்கால வைப்பு நிதி திட்டமான பி.எப்., திட்டத்தின் மீதான வரி விதிப்பு சர்ச்சை அடங்குவதற்குள், பொது வருங்கால வைப்பு நிதியான பி.பி.எப்., திட்டத்திற்கான வட்டி குறைப்பு, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்புக்குஉள்ளாகி இருக்கிறது. பி.பி.எப்., எதிர்கால வாழ்க்கைக்கான, நீண்டகால முதலீடாக கருதப்படுவதால் இதன் மீதான வட்டி குறைப்பு அறிவிப்பு பரவலான எதிர்ப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. கடந்த மார்ச், 18ம் தேதி, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், நிதி அமைச்சகத்தால் குறைக்கப்பட்டது. இதன் படி, பி.பி.எப்., திட்டத்திற்கான வட்டி விகிதமும், 8.7 சதவீதத்திலிருந்து, 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டது.
வட்டி குறைப்புஏப்ரல் மாதம் முதல், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், சந்தை நிலைக்கேற்ப ஒவ்வொரு காலாண்டும் மாற்றியமைக்கப்படும் என, கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கு முன், சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், அரசு பத்திரங்களுக்கு நிகராக அமைந்திருந்தன. இவை, ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வந்தன.மேலும், 0.25 சதவீத கூடுதல் பலனும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது காலாண்டுக்கு ஒருமுறை பரிசீலிக்கப்படும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனடிப்படையில், பி.பி.எப்., வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளன.
பாதிப்பு இருக்குமா?இந்த வட்டி குறைப்பு, சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான பலனை குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது. ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வங்கிகள் உடனடியாக அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில்லை என, ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் வங்கிகள், டிபாசிட் மீதான வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்கும் சூழல் இல்லாததால், வட்டி விகிதத்தை உடனடியாக குறைக்க முடியவில்லை என கூறி வந்தன. சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி, வங்கி டிபாசிட்கள் தரும் பலனை விட அதிகமாக இருக்கும் என்பதால், வங்கிகள் இதில் தயக்கம் காட்டின. இந்த நிலையை சீராக்கும் வகையில் சிறுசேமிப்பு வட்டி விகிதம், சந்தை நிலைக்கேற்ப கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி, வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.இவை, பி.பி.எப்., முதலீட்டின் பலன் மீதான பல்வேறு கேள்விகளை எழுப்பிஉள்ளன. வட்டி விகிதம் குறைந்திருப்பதுடன் வரும் காலாண்டுகளில் மேலும் குறைக்கப்படும் வாய்ப்பு உண்டாகுமா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
என்ன செய்ய வேண்டும்சிறு முதலீட்டாளர்கள், அதிக பலன் தரக்கூடிய முதலீட்டு சாதனங்களை இனி நாட வேண்டிய சூழலை இது ஏற்படுத்தலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதன் காரணமாக, பி.பி.எப்., முதலீட்டை இனி எப்படி அணுக வேண்டும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.ஆனால், வட்டி குறைப்பை மட்டுமே வைத்துக் கொண்டு, பி.பி.எப்., திட்டத்தின் பலனை அளவிடக் கூடாது என, நிதி வல்லுனர்கள் கருதுகின்றனர். பி.பி.எப்., நீண்டகால சேமிப்பு திட்டம் என்பதோடு, அது முதலீடு மற்றும் திரும்பப் பெறும் நிலையில் வரிச்சலுகை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. அதோடு, திட்டத்திற்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் அமைந்தாலும், மாதாந்திர அடிப்படையில் வட்டி கணக்கிடப்பட்டு, ஆண்டு இறுதியில் வரவு வைக்கப்படும். எனவே, இது கூட்டு வட்டி முறையில் வருடாந்திர அடிப்படையில் தான் அமையுமே தவிர, காலாண்டு அடிப்படையிலல்ல என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
மேலும் வட்டி குறைப்பை தனியே பார்க்காமல், மொத்தமாக சந்தையில் ஏற்பட்டுள்ள குறைந்த வட்டி சூழலில் வைத்து பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். தற்போது ஓரளவு பணவீக்க விகிதம் மற்றும் வட்டி விகிதம் இரண்டுமே இறங்கு முகத்தில் உள்ளன. எனினும் வட்டி விகிதத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, ஒருவர் தன் முதலீட்டு உத்தியை மாற்றுவது சரியாக இருக்காது என, நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|