பதிவு செய்த நாள்
02 ஏப்2016
07:07
மும்பை : ‘இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், நடப்பு 2016 – 17ம் நிதியாண்டில், சர்வதேச பிரச்னைகளால் கடும் சவாலை சந்திக்க நேரும்’ என, தர நிர்ணய நிறுவனமான, இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரீசர்ச் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை : மத்திய அரசு, 11 சதவீத பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி, பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகிறது. இது, நடப்பு நிதியாண்டில், கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி காண, ஒரளவு உதவும்; அது கூட, பொதுத் துறை முதலீடுகளும், மக்களின் நுகர்வு கலாசாரமும் பெருகினால் மட்டுமே சாத்தியமாகும். மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கு, முக்கியத்துவம் அளிப்பதால், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையும்; இது, நிறுவனங்களின் வளர்ச்சிக்கு கடிவாளமிடும்.இத்தகைய சூழலில், வெளிநாட்டு நிலவரங்களின் தாக்கத்தையும், உள்நாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம்; சர்வதேச அளவில், பொருட்களுக்கான தேவை குறைந்திருப்பது, சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு போன்ற சவால்கள், இந்திய நிறுவனங்களுக்கு காத்திருக்கின்றன. அதனால், நடப்பு நிதியாண்டில், 500 நிறுவனங்களின் லாபம், இரட்டை இலக்கத்திற்கும் குறைவாக, 7 – 9 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும். குறிப்பாக, விளைபொருட்கள் மற்றும் பங்கு முதலீடு சார்ந்த துறைகளில், இந்த தாக்கம் காணப்படும். நிறுவனங்கள் கடன் பெறுவதும், புதிய திட்டங்கள், விரிவாக்க நடவடிக்கைகள் போன்றவற்றில் முதலீடு செய்வதும் குறையும்.
எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்ளும், மருந்து, வாகனம் மற்றும் ஜவுளி துறை நிறுவனங்கள், மிதமான விற்பனை வளர்ச்சியைக் காண வாய்ப்புள்ளது. அதுபோல, அரசு, தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு அதிகம் செலவழிக்கும் என்பதால், அத்துறை நிறுவனங்கள் பயன்பெறும். நவரத்தினங்கள் மற்றும் நகைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் ஏற்றுமதி குறையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடன் கொள்கைவாராக்கடன் சுமை, மூலதன தேவை போன்ற சிக்கல்களை சந்தித்து வரும் வங்கிகள், சீரான கடன் கொள்கையை பின்பற்ற வாய்ப்புள்ளது. இதனால், நிதியாதாரமுள்ள நிறுவனங்களும் பாதிக்கப்படலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|