பதிவு செய்த நாள்
03 ஏப்2016
07:06
ஈரோடு:ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சிப்காட் வளாகத்தில் உள்ள, 22 ஜவுளி பதனிடும் ஆலைகள், உற்பத்திச் செலவு அதிகரிப்பால், போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்த ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக, பெருந்துறை சிப்காட் ஜவுளி பதனிடும் ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்த, 52 ஜவுளி பதனிடும் பெரிய ஆலைகளில், தற்போது, 22 ஆலைகள் மட்டுமே செயல்படுகின்றன. இங்கு, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் ஆலைகளுக்கு மட்டுமே, தொழில் உரிமம் வழங்கப்படுகிறது. இதன்படி, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்துள்ள, ஆலைகளுக்கு, ஒரு கிலோ துணியை சுத்திகரிப்பு செய்ய, 20 ரூபாய் செலவாகிறது. ஆனால், ஈரோடு, பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஜவுளி பதனிடும் ஆலைகள், சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாமல் செயல்படுவதால், அவற்றின் உற்பத்தி செலவு குறைவாக உள்ளது. இதனால், இந்த ஆலைகளின் விலையுடன், சிப்காட் ஆலைகளால் போட்டி போட முடியவில்லை. ஜவுளி பதனிடும், ‘ஆர்டர்’ குறைந்ததால், 30 ஆலைகள் மூடப்பட்டு, நேரிடையாகவும், மறைமுகமாகவும், ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதேநிலை நீடித்தால், 2019க்குள், சிப்காட்டில் உள்ள, 80 சதவீத ஆலைகள் மூடப்படும். கடந்த, தி.மு.க., ஆட்சி, கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்தை அறிவித்தது. அதற்கடுத்து வந்த, அ.தி.மு.க., அரசு ஒதுக்கிவிட்டு, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்து, 700 கோடி ரூபாய் ஒதுக்கியது.குஜராத் போன்ற மாநிலங்களில், கழிவுநீரை சுத்திகரித்து, கடலில் சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவதால், ஆலைகள் செலவு குறைகிறது. இதை, புதிய ஆட்சியாளர்கள் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|