பதிவு செய்த நாள்
10 ஏப்2016
04:43
புதுடில்லி:இந்தியாவில் இன்ஜினியர், எம்.பி.ஏ., பட்டதாரிகளை விட, வாகனம், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் தொழிற்கல்வி பயின்றோருக்கு அதிக வேலைவாய்ப்பும், கூடுதல் ஊதியமும் கிடைப்பதாக, ‘டீம்லீஸ் சர்வீசஸ்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., படித்தோருக்கான பணிகள், ‘வைட் காலர் ஜாப்ஸ்’ எனப்படுகின்றன. இப்பிரிவில் பெரும்பாலானோர், சட்டை கசங்காமல், அழுக்கு ஆகாமல், ‘ஏசி’ அறைகளில் பணியாற்றுவர்.
தொழிற்கல்வி படித்தோருக்கான பணிகள், ‘புளு காலர் ஜாப்ஸ்’ என்றழைக்கப்படுகின்றன. இப்பிரிவில், பெரும்பாலானோரின் பணிகள், உடலுழைப்பு சார்ந்தவை. இவர்கள், வாகனம், உணவு, ஆடைகள் தயாரிப்பு, அழகுக் கலை போன்ற துறைகளில், திறன் சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.
இத்தகையோர், பொறியியல் பட்டதாரிகளை விட, 10 – 27 சதவீதம் கூடுதல் ஊதியம் வாங்குகின்றனர். ஒரு சில பிரிவினர், எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு நிகரான ஊதியம் பெறுகின்றனர். ‘‘இதில் இருந்து, இந்தியாவில் திறன் சார்ந்த பணியாளர்களுக்கு தேவை அதிகரித்து வருவதைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, அவர்களின் ஊதிய வளர்ச்சியும், பொறியாளர்களை விட அதிகமாக உள்ளது. இது, திறன் சார்ந்த தொழில்களில், ஊழியர்களுக்கு உள்ள பற்றாக்குறையை காட்டுகிறது,’’ என, டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிறுவனம், வாகனம், வங்கி, காப்பீடு, மின்னணு, உணவு பதப்படுத்துதல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ஆரோக்கிய பராமரிப்பு, சரக்கு போக்குவரத்து, சில்லரை விற்பனை, சுற்றுலா உள்ளிட்ட, 12 துறைகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில், பொறியாளர்களை விட, தொழிற்கல்வி ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதில், வாகன துறை முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை, தேவைக்கு அதிகமாக, இரு மடங்கு பெருகி உள்ளது. தரமற்ற கல்வியால், வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதேசமயம், தொழிற்கல்வி பயில்வோர், எண்ணிக்கை அதிகரிக்காமல், நிலையாக உள்ளது. இது, தொழிற்கல்வி சார்ந்த பணிகளுக்கு ஆள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, ஊதிய உயர்வுக்கு வழிகோலுகிறது என, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|